செவ்வாய், 31 டிசம்பர், 2019

முடிவே ஆரம்பம்...

பல நேரங்களில் வேதனைகள்
கஷ்டங்கள்
கனவுக் கலைப்புகள்
இப்படிப் பல காயங்கள்....

மனதில் ஆறாமல் வடுவாய் இருக்கும்
பலரின் மனங்களில்...

ஆனாலும்
அடுத்த நொடியோ... நிமிடமோ...
நமக்காகக் காத்திருப்பது இல்லை...

நாமும் அதைக் கடந்து செல்கிறோம்.

இப்படி வருவது தான் ஒவ்வொரு ஆண்டு புது வருடமும்...

நம் கனவு... இலட்சியம்... வாழ்க்கை... என்று ஒவ்வொருவரும் ஒவ்வொன்றை நோக்கி...

ஓடுவோம்...
ஓடுவோம்...

வாழ்க்கை முடியும் வரை...

அடுத்த வருடம் ஒவ்வொரு இல்லத்திலும் புது விடியலைக் கொண்டு வரட்டும்...

இனியபாரதி. 

செவ்வாய், 15 அக்டோபர், 2019

நினைத்துப் பார்க்க...

நினைக்க மனம் இருந்தால்
மறக்கவும் மனம் இருக்கும்....

அழ காலம் இருந்தால்...
சிரிக்கவும் காலம் இருக்கும்...

அன்பு செய்ய முடிந்தால்...
பகைக்கவும் முடியும்...

எல்லாம் முடியும்....
நீ நினைத்தால்!!!

இனியபாரதி.

செவ்வாய், 20 ஆகஸ்ட், 2019

கதவைத் திறந்து...

அறையின் உள்ளே அமர்ந்து
ஆண்டவனைத்
தேடினால் கூட
கிடைக்க மாட்டான்...

கதவைத் திறந்து வெளியே வந்து பார்...
ஆண்டவன் உன் அருகிலேயே
வந்து நிற்பான்...

இனியபாரதி.

திங்கள், 19 ஆகஸ்ட், 2019

இனியவை நாற்பது அல்ல...

உன்னில் இனியவை நாற்பது மட்டும் அல்ல....
கோடி உள்ளன...
அதை உணர்ந்து கொள்ள எனக்குத்தான்
பக்குவங்கள் நாற்பது தேவை!!!

இனியபாரதி.

ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2019

தெரிந்து கொள்ள...

உலகில் அறிந்தும் தெரிந்தும் கொள்ள முடியாத
பல விடயங்கள்
நம்மைச் சுற்றி மட்டும் அல்ல...

நம்மிலும்

நம் உற்றவர்களிடமும்

இருந்து கொண்டே தான் இருக்கின்றன....

இனியபாரதி.

சனி, 17 ஆகஸ்ட், 2019

பிரகாசம்...

நேற்றைய நினைவுகள் அழிந்து
இன்றைய நிஜங்கள் தொடர்ந்து
நாளைய நன்மைகள் மலர
என்றும் இறைவனைப் பிரார்த்திப்போம்.

இனியபாரதி.

வெள்ளி, 16 ஆகஸ்ட், 2019

கலங்காமல்...

கலங்காமல் அவள் படும் பாடுகள்
சரித்திரம் பேசும்...

உறங்காமல் அவள் கண்கள்
ஒளி கொடுக்கும்...

அசராமல் இருக்கும் ஒவ்வொரு பொழுதும்
அவள் வசந்த காலங்கள்...

அயராது உழைக்கும் அவளிரு கைகள்...

சிந்தனை உயர்வாய்!
என்றும் அவள் மனத்தைப் போல!

இனியபாரதி.

வெள்ளி, 9 ஆகஸ்ட், 2019

என் நேரப்படி...

என் நேரப்படி எப்போதும் உன்னுடன் இருப்பது தான் சுகம்...

உன் நேரப்படி எப்போதும் என்னைக் காக்க வைப்பது தான் சுகம்...

யார் நேரம் என்பதை விட...
யாருக்கான நேரம் என்று பார்க்கும் போது... நான் வென்றுவிடத் துடிக்கிறேன்...

அது எனக்கான நேரம் என்று!!!

இனியபாரதி.

செவ்வாய், 6 ஆகஸ்ட், 2019

திருட்டுத்தனமாய்...

திருட்டுத்தனமாய் அவள் பார்க்கும் பொழுதுகள்...
என் கண்கள் வேலை செய்வது போல் நடிக்கும்...
உண்மையில் அவளை ரசித்துக் கொண்டு...

இனியபாரதி.

வெள்ளி, 2 ஆகஸ்ட், 2019

கொடுத்த அனைத்தும்...

அவள் கொடுத்த
அன்பு,பாசம், அரவணைப்பு
அனைத்தும்
எனக்கானவைகளாய் இருந்ததால்
திருப்பித் தர மனம் இல்லாமல்
நானே வைத்துக் கொண்டேன்,
என் இதயக் கதவறையைப் பூட்டி...

இனியபாரதி.

வியாழன், 1 ஆகஸ்ட், 2019

எதற்காக?

அன்பும் அரவணைப்பும்
அவளிடம் இருந்து கற்றுக் கொண்டது தான்...

கற்றுக் கொண்ட பின் என்னால்
அவளை விட முடியாமல் தவிக்கிறேன்...

அவள் இவை இரண்டையும்
இழந்துவிட்டு நிற்கிறாள்!!!

இனியபாரதி.

திங்கள், 15 ஜூலை, 2019

உவர்ப்புத் தண்ணீர்...

என் வாழ்வில் இனிமையை கொடுக்கும்
இத்தண்ணீரின் மதிப்பு
சிந்திய பின்பு தான் தெரிந்தது...

தண்ணீருக்கு இருந்த மதிப்பை விட...
என் அன்பிற்கு இருந்த மதிப்பு அதிகம் என்று....

இனியபாரதி.

ஞாயிறு, 14 ஜூலை, 2019

கனவின் விளிம்பில்...

அவள் காண்பது கனவு என்று
உணரும் முன்னரே
அவன் மறைந்து விடுகிறான்....

கனவில் கண்டவன்
நேரில் வந்தாலும்
அடையாளம் தெரியாத அபலைப் பெண் அவள்...

அவள் அன்றிரவு சூடிய மல்லிகைக்கே
அவளின் நிலை புரியும்!!!

இனியபாரதி.

வெள்ளி, 12 ஜூலை, 2019

கலக்கமுற்றாலும்....

கலக்கமுற்றாலும் கண் கலங்க மாட்டேன்...
உம் இரு கைகளும் என்னைத் தாங்கிக் கொள்ள இருப்பதால்...

வேதனை உற்றாலும் வெட்கம் அடைய மாட்டேன்...
உம் அன்பு என்னைக் களிப்படையச் செய்வதால்...

என்றும் இனிமையை உணர்கிறேன் உம் உடனிருப்பில்....

இனியபாரதி.

திங்கள், 17 ஜூன், 2019

கடையில் கண்டேன்...

கண்ணிருந்தும் காணாமல்
தவித்துக் கொண்டிருந்தேன்
தணித்துக் கொள்ள இடம் தேடி...

வழி இருந்தும் தேடாமல்
அலைந்து கொண்டிருந்தேன்
அமைதி தேடி...

கடையில் கண்டேன்
இவை எல்லாம் ஒன்றாய் சேர்ந்த
உன் தோள்களை!!!

இனியபாரதி.

புதன், 22 மே, 2019

இரண்டு தத்துவங்களும்...

நீ சொல்லும் இரண்டு தத்துவங்களும்
கேட்பதற்கு நன்றாய் இருந்தாலும்
நடைமுறையில் சாத்தியக் கூறுகள்
அதிகம் இல்லை தான்...

இருந்தும்...
அதை இரசிக்கச் செய்ய
நீ கொடுத்த உதாரணங்கள்
அழகு தான்...

இனியபாரதி.

செவ்வாய், 21 மே, 2019

அன்றொரு நாள்...

அவள் தருவது தான்
எனக்கு எல்லாம் என்று நான் நினைக்கும் பொழுதுகள்
எனக்கு ஏமாற்றங்கள்
காத்திருப்பது உண்மை தான்...

அவள் தந்து விட்டுச் செல்வது
வலியையும் வேதனையையும்
மட்டும் தான்...

இனியபாரதி.

திங்கள், 20 மே, 2019

அழுது கொண்டிருக்க...

அழுது கொண்டிருக்க மட்டுமே தெரிந்த அவளும்...
அணைத்துக் கொள்ள மட்டுமே தெரிந்த அவனும்...
என்றும் ஊடலுடன் ஒரு கூடலாய்...

இனியபாரதி.

சனி, 11 மே, 2019

அவளின் அழகைக் கண்டு...

அவளின் அழகைக் கண்டு
திகைத்து நின்ற பல வேளைகள்...
அவளுக்கும் எனக்கும்
என்ன உறவென்று
அறிந்து கொள்ள
முயலும் அந்தத் தருணங்கள்...
அவளின் மழலை 'அம்மா' மொழி
அனைத்தையும் மறக்கச் செய்து விடுகிறது...
அவளுக்காய் நான் என்றும்...
இனியபாரதி.

புதன், 1 மே, 2019

உழைப்பு...

ஊதியம் பெறத் தகுதியைத் தந்தது
என் உழைப்பு...

ஊர் சுற்ற பணத்தைப் பெற்றுத் தந்தது
என் உழைப்பு...

வறுமையின் உட்சத்தைப் போக்க வழி செய்தது
என் உழைப்பு...

பட்டினியின் கோரத் தாண்டவத்தைத் தகர்க்க உதவி செய்தது
என் உழைப்பு....

என் உழைப்பு இல்லையேல்
நான் இல்லை...

உழைப்பு இல்லா உயிரினம்
உலகில் இல்லை...

அனைவருக்கும் உழைப்பாளர் தின வாழ்த்துகளுடன்....

இனியபாரதி.

வெள்ளி, 26 ஏப்ரல், 2019

கண் ஜாடையில்...

அவள் கண் ஜாடை
அவன் உள்ளத்தைத் தட்டி எழுப்பி
கொள்ள வைத்தது காதலை...

இனியபாரதி.

வியாழன், 25 ஏப்ரல், 2019

இரகசிய மனம்...

அன்றன்று நடக்கும் காட்சிகள் அனைத்தும்
மனதில் பதிந்துவிட்டு
ஏதோ ஒன்று செய்துகொண்டே
இருப்பதில் தான்
என் இரகசியம் முழுவதும் உள்ளது...

இனியபாரதி.

புதன், 24 ஏப்ரல், 2019

ஏன் என்று...

ஏன் என்று தவித்துக் கொண்டிருந்த பொழுதுகள்
ஒன்றும் அறியா குழந்தையின் மனம் கொண்டு கழிந்தன...

எல்லாம் அறிந்த பிறகு
வஞ்சனை புகுந்து கொண்ட மனம் அலைகளிக்கின்றது...

இனியபாரதி.

செவ்வாய், 23 ஏப்ரல், 2019

செல் என்று...

செல் என்று சொல்லிவிட்டு
அடுத்த நொடி
மனம் ஏங்கும் தவிப்பைத்தான்
காதல் என்று அவன் நினைத்தான்...

அருகில் வா வா என்று அழைத்துவிட்டு
தூரத் துரத்துவது தான் காதல் என்று
அவள் உணர்த்தி விட்டாள்..

இனியபாரதி.

திங்கள், 22 ஏப்ரல், 2019

தயக்கம் கொள்ளாதே...

கொண்டாடும் சில உறவுகளும் உண்டு...
கண்டுகொள்ளாமல் இருக்கும் சில உறவுகளும் உண்டு...

உன்னைக் கொண்டாடும் உறவுக்கு
நீ உண்மையாய் இரு...

உன்னைக் கண்டு கொள்ளாமல் இருக்கும் உறவை
உதறிவிடவும் தயக்கம் கொள்ளாதே...

இனியபாரதி.

ஞாயிறு, 21 ஏப்ரல், 2019

ஒருபோதும்...

உன்னை மறந்து நான் வாழ்ந்த நேரங்கள் குறைவு...

உன் எண்ணம் இல்லாமல் நகர்ந்த
என் நிமிடங்கள் அதைவிட குறைவு...

ஒருபோதும் உன்னை மறவேன் என்று மட்டும் நினைக்காதே...

இனியபாரதி.

வியாழன், 28 மார்ச், 2019

கணிப்பு...

என் கணிப்பு சரி என்றால்
நான் உம் மீது கொண்டுள்ள அன்பு உண்மை...

நீர் என்னை அன்பு செய்யும் அளவு
நானும் உம்மை அன்பு செய்கிறேன்...

நீர் என்னுடன் சண்டையிடும் அளவு
நானும் உம்முடன் சண்டை இடுவேன்...

இதுவல்லவே அன்பு...

என்னை நீரும்...
உம்மை நானும் மனதில் புரிந்து கொண்டு வாழ்கிறோமே அதுவே போதும்...

இனியபாரதி.

புதன், 27 மார்ச், 2019

உன் வார்த்தை கேட்டு...

நீ கூறும் ஒவ்வொன்றும்
என் செவிகளில் சத்தமாய் விழ....
அதை நான் மெளனமாய்
என் மனதில் வைத்து இரசிக்க
ஏற்ற நேரம் அன்றோ
இந்த அதிகாலை என்று என்னை உணர வைத்தாய்....

இனியபாரதி.

செவ்வாய், 26 மார்ச், 2019

என் மொழி...

நானும் நீயும்
பேசும் மொழி
என் மொழியாக இருக்க வேண்டும் என்று
ஆசைப்படுவது தவறுதான் என்றாலும்

என் மொழி
உன் மொழியாகவும்
உன் மொழி
என் மொழியாகவும்
என்றும் இருக்கும் பட்சத்தில்
நமக்குள் பிரிவு ஏது???

என்றும் உன் பாதம் சரணடைவேன் இறையே!!!

இனியபாரதி.

திங்கள், 25 மார்ச், 2019

உம்மைப் பற்றிக்கொள்ள...

நீதியிலும்
உண்மையிலும்
கஷ்டங்களிலும்
கவலைகளிலும்
உம்மை மட்டுமே
நான் பற்றிக் கொண்டு வாழ
வரம் தா இறைவா!!!

இனியபாரதி.

ஞாயிறு, 24 மார்ச், 2019

காணற்கரிய...

காணர்கரிய இடங்கள் அருகிருந்தும்
உன் மனத்தறையில் குடி இருக்கும்
என் நிலையை அறியத் தான் ஆசை ...

இனியபாரதி.

சனி, 23 மார்ச், 2019

காரணம் தெரியாமல்...

உழைத்து உழைத்து
முன்னேறியது என்றாலும்...

அடி வாங்கி வாங்கி
சுரணை அற்றுப் போனது என்றாலும்...

அழுது அழுது
மனம் வலியதாய் மாறியது என்றாலும்...

ஒரு நொடிப் பொழுது...
யாரும் இல்லா நிலை
வலிக்கத் தான் செய்கின்றது...

இனியபாரதி.

வெள்ளி, 22 மார்ச், 2019

ஏற்றுக் கொள்ள...

என்னை என்னவனாக
ஏற்றுக் கொள்ளும் பக்குவம்
அவளுக்கு வரும் போது...

அவளை அவளாக
ஏற்றுக் கொள்ள என் மனம் தயங்கவில்லை...

இனியபாரதி.

வியாழன், 21 மார்ச், 2019

களவும் கற்று...

கற்க வேண்டியது
எவ்வளவு இருந்தாலும்
இந்தக் களவைக்
கற்று அறிந்தவன்
உண்மையில் ஞானியாகிறான்.

இனியபாரதி.

புதன், 20 மார்ச், 2019

தேவைக்கு அதிகமானால்...

தேவைக்கு அதிகமாகும் போது
உப்பும் தன் மதிப்பை இழக்கிறது...
சர்க்கரையும் அப்படித் தான்...

நமக்கு அத்தியாவசியம் என்றாலும்
அதிகமான நிலையில்
உதறித் தள்ளப்படும் நிலை தான்
இந்த அன்பிற்கும்...

அதிகமாய் கொடுத்துவிடும் போது
திகட்டிவிடுகிறது...

திகட்டக் கொடுப்பது நம் பழக்கம் என்றாலும்
அதைப் பெறத் தகுதி இல்லாதவர்கள்
வாழும் உலகம் தான் இது...

இனியபாரதி.

செவ்வாய், 19 மார்ச், 2019

நான் வரைந்த ஓவியம்...

அப்படி ஒன்றும் எடுப்பாய் இல்லை என்றாலும்
என் ரசனையில் அடிக்கடி சுவை சேர்ப்பது
நான் அவளை நினைத்து
அவளுக்காய் வரைந்து கொடுத்த ஓவியம் தான்...

அது வெறும் ஓவியம் மட்டும் அல்ல...
என் கலைத்திறனின் மொத்த உருவம்...

அதை எப்படி சுலபமாக மறந்து விடுவேன்???

இனியபாரதி.

திங்கள், 18 மார்ச், 2019

அன்பு கொண்ட நெஞ்சம்...

அவள் அன்பு முழுவதையும்
எடுத்துக் கொள்ளும் உரிமை
எனக்கு இல்லாமல் இருக்கலாம்...

ஆனால்...
என் அன்பு முழுவதையும்
அவளுக்குக் கொடுக்கும்
சுதந்திரம் எனக்கு இருக்கின்றது...

இனியபாரதி.

ஞாயிறு, 17 மார்ச், 2019

உன்னை அறிந்தால்...

உன்னிடம் இருக்கும் திறமைகளை...
உன் தியாகங்களை...
உன் பொறுமையை...
உன் போற்றுதலை...
உன் உணர்வுகளை...
உன் எண்ணங்களை...
நீ மதிக்கக் கற்றுக் கொள்ளும் போது
தானாகவே
எல்லோராலும் மதிக்கப்படும்...

இனியபாரதி.

சனி, 16 மார்ச், 2019

முயற்சி உடையார்...

முயன்று முயன்று
தோற்றுப் போவதில் கூட
எனக்கு மகிழ்ச்சி தான்...

முயற்சிக்காமல்
அடுத்தவர் உழைப்பில்
வாழ்வதை விட...

என் உழைப்பில்
நான் உண்ணும்
ஒரு வேளை உணவு கூட
அமிர்தம் தான்...

என் முயற்சியில்
உன்னைப் பயிரிடுகின்றேன்...
உன் முயற்சியால் விளைந்து
எனக்குப் பலனைத் தா!!!

விவசாயி பயிரிடம்...

இனியபாரதி.

வெள்ளி, 15 மார்ச், 2019

காரிருள் பள்ளத்தாக்கின் நடுவினிலும்...

காரிருள் சூழ்ந்து நிற்கும்
ஒரு பள்ளத்தாக்கின் நடுவில்
நான் நிற்க நேர்ந்தாலும்
நீர் என்னோடு இருப்பதால்
எதைக் கண்டும் பயப்படாமல்
முன்னேறிச் செல்வேன்...

இனியபாரதி.

வியாழன், 14 மார்ச், 2019

எப்போதும் போல்...

எப்போதும் போல்
மனமகிழ்ச்சியாக இருக்க
ஆசைப்பட்டு
முழுதுமாக அன்பு செய்த பின்...
அவன் இழந்த மகிழ்ச்சியை
யாராலும் திருப்பித்தர முடியாததால்
தன்னிலை மறந்து அலைகிறான்...

இனியபாரதி.

புதன், 13 மார்ச், 2019

என் இனிய பொன் நிலாவே...

என் இனிய இந்த வாழ்க்கையில்
ஒரு அழகிய நிலவாய் வந்து
என்றும் அற்புதங்கள் செய்யக் கூடியவள் நீ...

உன்னில் கலங்கம் வர
நான் ஒரு காரணமாய் இருக்க மாட்டேன்...

இனியபாரதி.

செவ்வாய், 12 மார்ச், 2019

இனிய உளவாக இன்னாத கூறல்....

இனிய சொற்கள் இருக்கும் போது
கடுமையான சொற்களை ஏன் பேச வேண்டும்?

அருமையான வள்ளுவரின் குறள்...

பெரும்பாலும் நமக்குத் தெரியாதவர்களிடம்
இனிமையாகப் பேசத் தெரிந்த நமக்கு
நம் அன்புக்குரியவர்களிடம்
பேசத் தெரிவது இல்லை...

மற்றவர்களை உபசரிக்கும் அளவுக்கு
நம் உறவுகளை உபசரிக்கத் தவறி விடுகிறோம்...

அது ஏன் என்று நம் மனதிற்கு மட்டும் தான் தெரியும்...

இனிய சொற்களைப் பாகுபாடு இல்லாமல் பேசப் பழகுவோம்...

இனியபாரதி.

திங்கள், 11 மார்ச், 2019

நான் வழி அறிந்தேன்...

நான் செல்லும் வழிகள்
முள்ளும்
கரடும்
முரடும்
காரிருளும்
கசப்புகளும்
சோகங்களும்
நிறைந்து இருந்தாலும்
நான் அடையும் இடம்
புனிதமாக இருக்கும் என்ற ஆசையில்
தினமும் தொடர்கிறேன்...

இனியபாரதி.

ஞாயிறு, 10 மார்ச், 2019

தனித்து நில்... துணிந்து செல்...

நீ பெண் என்பதால்
உன்னை நடத்தும் விதம் மாறும் இடத்திற்கு
நீ எதற்காகவும் செல்லாதே...

உன் மனம் விரும்புவதை செய்யத் துடிக்கும் போது
உன்னைத் தடுக்கத் துடிக்கும்
ஆண் வர்கத்திடம்
உன் உறவைத் தொடராதே...

உன் இனம், மதம், நிறம் பற்றி
யோசிக்காதே...

உனக்கு எல்லாம் ஒன்று தான்...
நீ ஒரு பெண்....

உலகை ஆட்டிப் படைக்கப் பிறந்தவள்...

உன்னால் முடியாதென்று ஒன்றுண்டோ??

இனியபாரதி.

புதன், 6 மார்ச், 2019

இடைவெளி இல்லா...

சிறிது கூட இடைவெளி இல்லாமல்
நெருங்கி இருக்கும் அவள்...
அவளின் மணம்...
இரண்டும் என்னை விட்டுச் சென்றுவிட்டன...

நான் மட்டும் ஏங்கிக் கொண்டிருக்கிறேன்...
அவளின் நினைவால்...

இனியபாரதி.

செவ்வாய், 5 மார்ச், 2019

கருணையின் வடிவு...

அவளின் கலங்கமில்லாத் தன்மை
என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது...

உண்மைக்கும்
பொய்க்கும்
ஒரே முகத்தைக் காட்டுகிறாள்...

நன்மையோ
தீமையோ
புன்முறுவலுடன் இருக்கிறாள்...

அவளின் பால் மனது தான்
அவளின் இத்தகைய தன்மைகளுக்குக் காரணம்...

நானும் உன்னைப் போல...
மாற வேண்டும் என் இனிய சந்திரனே!!!

இனியபாரதி.

திங்கள், 4 மார்ச், 2019

வெள்ளி ரதம்...

அன்பின் ஆணிவேராய்
அவள் இருக்கும் அந்த நிமிடங்கள் எல்லாம்
தங்கத்தால் வணையப்பட்ட அவளை
வெள்ளி ரதத்தில் வைத்து
தெருத்தெருவாய் அழைத்து வந்து
இவள் என்னவள் என்று
பாட ஆசை தான்...

இனியபாரதி.

ஞாயிறு, 3 மார்ச், 2019

ஏன் இந்த தடுமாற்றம்?

இச்சூழல் என்னை ஏதாவது ஒரு குழியில் விழத் தாட்டி விடுமோ என்று
பயமாகத்தான் உள்ளது...

தெளிவுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று ஆசை தான்...

தெளிவாக இல்லாவிட்டாலும் உள்ளம் பாரமாகத் தான் இருக்கும்...

ஏற்கவும் முடியாமல்...
இழக்கவும் முடியாமல்...
தவிக்கும் மனது...

இனியபாரதி.

சனி, 2 மார்ச், 2019

கொடுத்து வைத்தது...

அவள் கொடுத்து வைத்தது
அவ்வளவு தான் என்று
அவளை விட்டுப்பிரிந்து வாழ எண்ணித்தான்
தனிமையைத் தேர்ந்தெடுத்தேன்...

இப்போது அந்தத் தனிமை
என்னை விட்டுச் சென்று விடாதே
என்று என்னைத் துரத்துகிறது...

இனியபாரதி.

வெள்ளி, 1 மார்ச், 2019

எல்லாம் கடந்து போகும்...

நேற்றைய தினம் ஒரு கனவாய்...
இன்றைய தினம் ஒரு போர்க்களமாய்...

நாளைய தினம் ஒரு நந்தவனமாய்
இருக்குமோ என்ற ஏக்கத்தில்
தூங்கச் செல்லும்
ஒவ்வொரு உயிரும்
அடுத்த நாள் அனுபவிப்பதும்
போர்க்களம் தான்...

என்னே இந்த வாழ்க்கை என்று கூட நொந்துகொள்ள முடியாத நிலையில் நான்!!!

இனியபாரதி.

வியாழன், 28 பிப்ரவரி, 2019

நன்மருந்தாய்...

நலம் தரும் நன்மருந்தாய்
அவள் இருப்பாள் என்று எண்ணி
என் காயங்களை அவளிடம்
காட்டியது என் தவறு தான்...

காயத்தில் எல்லாம்
தீயைப் பற்ற வைத்துச் சென்றுவிட்டாள்...

இனியபாரதி.

செவ்வாய், 26 பிப்ரவரி, 2019

உள்ளங்கள்...

உள்ளங்கள் பிரிந்திருக்கும் போது
உடல் அருகில் இருந்தால் கூட
தனிமையைத் தான் உணரும்....

என் உடல் உன் அருகில்...
உள்ளம் ஏதோ ஒரு நினைவில்...
இந்த ஒரு நிலை நான் தேடிக் கண்டுகொண்டது...

காத்திருப்பேன் என் நிலை மாறும்வரை...

இனியபாரதி.

திங்கள், 25 பிப்ரவரி, 2019

தேடல் இல்லாமல்...

தேடல் இல்லாமல் கிடைத்துவிடும்
எந்த ஒரு பொருளோ நபரோ தன் மதிப்பை இழந்து விடுவது உண்மை...

அப்படி இல்லாமல்
தேடித் தேடிக் கிடைத்த பொருளை
பத்திரமாக வைத்திருக்கத் தெரியாதவர்கள் இருப்பதும் உண்மை ...

தேடலும் தேடலில் வரும் வலியும் உண்மை தான்...

காத்திருப்பேன்...
என் தேடலின் அருமை புரியும் வரை...

இனியபாரதி.

வியாழன், 14 பிப்ரவரி, 2019

எதற்காக என்றே தெரியாமல்....

காதலிப்பதில் தவரொன்றும் இல்லை தான்...

ஆனால்...

அதற்கு சில வரைமுறைகள் இருக்கின்றன...

பள்ளிபருவம் காதலிப்பதற்கு அல்ல...

என்ன ஒரு முதிர்ச்சி வந்திருக்கும் இந்த வயதில்??

கல்லூரிப் பருவமும் காதலிப்பதற்கு அல்ல...

நல்ல நண்பர்களைக் கண்டறிய ஏற்ற காலம்!!!

அதன்பின்
நீ எடுக்கும் ஒவ்வொரு முடிவும்
ஒவ்வொரு பாடம்...

அந்த வயதில் செய் உன் காதலை...

அதுவரை உன் மூலை முடுக்கு காதலை
பெண்களிடம் காட்டி
இம்சை செய்யாதே!!!

இனியபாரதி.

திங்கள், 11 பிப்ரவரி, 2019

எங்கே இருந்தாய்???

உன்னைப் பற்றிக் கவலை கொள்ளாமல்
நானாக சுற்றித் திரிந்த நாட்களை
என் மனக் கண்முன் கொண்டு வந்து
உன் கஷ்டங்களை எல்லாம்
நினைத்துப் பார்க்கிறேன்...

நான் இல்லாமல் நீ பட்ட துன்பங்கள்...
நான் எங்கே இருக்கிறேன் என்று
நீ அலைந்த தெருக்கள்...
உன் அன்பை நான் உணரச் செய்து
என்னை மறுபடியும் உன்னுடன் சேர்த்து வைத்து விட்டது...

இனியபாரதி.

ஞாயிறு, 10 பிப்ரவரி, 2019

என்றென்று...

எனக்கான விடியல் என்று என்று ஏங்கும் ஒவ்வொரு மனமும்...

தளராமல் முயற்சி செய்வதைத் தவிர வேறு வழி இல்லை...

நம் தன்னம்பிக்கை வாழ்வை முன்னேற்றும்....

இனியபாரதி.

சனி, 9 பிப்ரவரி, 2019

கவலை கொள்ளாதே...

கவலை கொள்வதால்
கூடப் போவது ஒரு முழம் கூட இல்லை...

குறையப் போவது நம் நிம்மதியும் உடல் நலனும் தான்...

இதை மனதில் வைத்து கவலை கொள்வதைக் குறைப்போம்...

இனியபாரதி.

வெள்ளி, 8 பிப்ரவரி, 2019

எழுத்தாணி...

அடிக்கடி எழுதிப் பழக்கம் இல்லை என்றாலும்...
என்று தொட்டாலும் எழுத்து அழகாய் வருவது தான் ஆச்சர்யம்..
உன் அன்பைப் போல...

இனியபாரதி.

வியாழன், 7 பிப்ரவரி, 2019

சண்டை இல்லா அன்பு...

ஒருபோதும் சண்டை இல்லாமல்
காலத்தை நகர்த்திவிடலாம் என்ற எண்ணத்தில்
நீ இருந்துவிடலாம்...

சில நேரங்களில் சண்டைகள் கூட
அன்பின் இலக்கணமாய் இருப்பது
உனக்கெப்போது புரியும் என்று
நான் கூட தவிக்கிறேன்...

இனியபாரதி.

புதன், 6 பிப்ரவரி, 2019

உனக்கும் எனக்கும்...

புல்லில் பனித்துளியும்
வானத்தில் கருமேகமும்
செடியில் மலரும்
கருமையில் வெண்மையும்
அழகில் கர்வமும்
அவளில் நானும்
என்றும் அழகு தான்...

இனியபாரதி.

செவ்வாய், 5 பிப்ரவரி, 2019

என்னைக் கண்டு...

அவளின் இதயம் துடிக்கும் படபட என்று
என்னைக் காணும் பொழுதெல்லாம்...

என் மனம் அலைபாய்கிறது
அவளின் இருவிழிகளைக் காணும் போது...

இனியபாரதி.

திங்கள், 4 பிப்ரவரி, 2019

அவளுக்கு மட்டும்...

அவளுக்கு மட்டும் நான் சொந்தம் என்று நினைக்கும் அந்த நேரம்
என் வாழ்வில் நுழையும் ஒவ்வொரு பெண்ணும்
எனக்கு இராட்சசியாகவே தெரிகிறாள்...

இனியபாரதி.

ஞாயிறு, 3 பிப்ரவரி, 2019

கண்டுபிடிக்க...

அவள் மனதின் எண்ணங்களைக்
கண்டுபிடிக்க எனக்கு ஆகும் காலம்
ஒரு யுகம் என்றாலும்
அதற்காகக் காத்திருக்கும்
என் 'காதல் காலம்'

இனியபாரதி.

சனி, 2 பிப்ரவரி, 2019

என்றாவது ஒருநாள்...

என்றாவது ஒருநாள் விடியும் என்ற எண்ணம்
எனக்கு மட்டும் அல்ல...
எல்லோருக்கும் இருப்பதால் தான்
இன்று வரை நம் வாழ்க்கை
நகர்ந்துகொண்டு இருக்கின்றது...

இனியபாரதி.

வெள்ளி, 1 பிப்ரவரி, 2019

அணைத்துக் கொள்ள...

அந்த நேரத்தில் அவளின் மனத்துடிப்பை அறிந்தபின்னும்
ஆறுதல் கூறாமல் இருக்க முடியவில்லை என்று எண்ணி தான்
அவளை அணைத்துக் கொள்ள ஆசைப்பட்டேன்....

இனியபாரதி.

வியாழன், 31 ஜனவரி, 2019

யாம் பெற்ற...

யாம் பெற்ற இன்பத்தை மற்றவர்
அனுபவிப்பதில்
நமக்குள்ள வருத்தம் தான் என்னவோ?

அடிக்கடி நாம் படும் துன்பத்தை
மற்றவர் அனுபவிப்பதில் மட்டும்
ஒரு இன்பம் நமக்கு!!!

இனியபாரதி.

புதன், 30 ஜனவரி, 2019

காக்கும் கரங்கள்...

நீங்கள் தரும் ஒருபிடி உணவு
என் வயிற்றை நிரப்புமோ என்னவோ???

என் உறவுகள் என்னை ஒருபோதும்
விட்டுக் கொடுத்ததே இல்லை...

அன்றாடம் கிடைக்கும் உணவை
என்னுடன் பகிர்ந்து கொண்டு தான் இருக்கின்றன...

நீங்கள் நடும் வலையமைப்பு கோபுரங்களால்
எங்கள் வாழ்வு அழிந்து கொண்டு வருவது மட்டும் தான்
நீங்கள் எங்களுக்குக் கொடுத்தது... கொஞ்சம் உணவோடு சேர்த்து!!!

சிட்டுக்குருவி...

இனியபாரதி.

செவ்வாய், 29 ஜனவரி, 2019

சர்க்கரை...

அவளின் பேச்சும் சர்க்கரை..
அவளின் மௌனமும் சர்க்கரை..

அவளின் அழுகை சர்க்கரை..
அவளின் ஆனந்தமும் சர்க்கரை..

அவளின் பிடிவாதம் சர்க்கரை..
அவளின் பிடிப்பும் சர்க்கரை..

அவளின் கோபம் சர்க்கரை..
அவளின் குணமும் சர்க்கரை..

இப்படி அவளை அணுவணுவாய் இரசிக்கும் நான் தான் அவளின் சர்க்கரைக்கட்டி...

இனியபாரதி.

திங்கள், 28 ஜனவரி, 2019

தெரிந்து கொண்ட...

நான் தெரிந்து கொண்ட பாதை
என் வாழ்வை
சரியான பாதையில் நடத்துமோ
தவறான பாதையில் நடத்து மோ
என்று யோசித்துக் கொண்டிருக்கும் நேரம்
என் மனகண்முன் வரும்
சில நபர்களை மறக்காமல்
மறந்துவிட்டால் எல்லாம் நலமாய் அமையும்.

இனியபாரதி.

ஞாயிறு, 27 ஜனவரி, 2019

அன்பின் ஆழம், அகலம்

புரிந்து கொள்ள பல மாதங்கள் ஆகலாம்...
புரிந்த பின் ஒரு நொடி கூடத் தேவை இல்லை
அவள் புன்னகையின் காரணம்  அறிய...

மனமும் முகமும் ஒன்றாய்ப் பொருந்திப் போன அவளையும்...
அவள் அன்பின் ஆழத்தையும் அகலத்தையும் உணராமல் போவேனோ?

இனியபாரதி.

சனி, 26 ஜனவரி, 2019

நான் பேச நினைப்பதெல்லாம்...

நான் பேச நினைப்பதை எல்லாம்
நீ பேசி நான் கேட்க
நான் வரம் கேட்கிறேன்...

அப்படி ஒரு வரம் இருந்தால்
நானும் காதலித்திருப்பேன் என்று
புன்முறுவல் செய்கிறாயே இறைவா!

இனியபாரதி.

வெள்ளி, 25 ஜனவரி, 2019

என்றும் இருக்குமா?

அன்பு என்னும் ஒரு வார்த்தை
பல நேங்களில் பலரின் மனங்களைக்
காயமடையச் செய்கின்றது...

அதன் காயம் ஆற பல நாட்கள் ஆனாலும்
அந்த வலி தந்த வேதனை என்றும் மறையாது...

இனியபாரதி.

வியாழன், 24 ஜனவரி, 2019

கெஞ்சும் உன் குரலை...

அவள் குரல் ஒன்றும் கடினமானது அல்ல...

அவள் மனதைப் போன்று மென்மையானது...

இரும்பின் தன்மையதும் அல்ல...

இதழ் போல் மென்மையானது...

அவள் கெஞ்சும் குரலைக் கேட்பதற்காகவே
அவளிடம் சண்டை போடத் தோன்றும்...

இனியபாரதி.

புதன், 23 ஜனவரி, 2019

கணித்துவிட...

கணிக்கப்படா நிலையில் நானும்
கணிக்க முடியா நிலையில் நீயும்...

உன் அழகு இவ்வளவு தானா?
நான் இவ்வளவு அழகா?

இனியபாரதி.

செவ்வாய், 22 ஜனவரி, 2019

தேடித் தரும்...

உன் பாசமும் அன்பும்
உனக்கு நிறைய சுற்றத்தை
ஏற்படுத்தித் தரும் என்று
நீ நினைப்பது தவறு...

உன் பொருளும் செல்வமும்
அழியும் வரை மட்டுமே
அவர்கள் உன்னுடன் வருவார்கள்...

நீ இருக்கும் இடம் தேடித் தேடி
அன்பும் பாசமும் வந்து குவியும்...

உன்னிடம் எதுவும் இல்லாத போது கூட
உன்னை அன்பு செய்வது
உன் பெற்றோர் மட்டுமே!!!

இனியபாரதி.

திங்கள், 21 ஜனவரி, 2019

அறமும் கற்று...

கல்வியில் கற்றுக் கொண்ட சிலவற்றை
வாழ்க்கையாகக் கொள்ளவில்லை எனினும்

தன் வாழ்க்கையில் கற்றுக் கொண்ட
அறத்தை கடைபிடித்து வாழ்தல் நலம்!!!

இனியபாரதி.

ஞாயிறு, 20 ஜனவரி, 2019

நம்பி வந்து...

நம்பி வந்த யாரையும் ஏமாற்றாமல்
அள்ளிக் கொடுக்கும்
அன்பு மனம் அனைவருக்கும் அமைவதில்லை...

அப்படி ஒரு இதயத்தை அருள இறைவனை வேண்டுவோம்...

இனியபாரதி.

சனி, 19 ஜனவரி, 2019

தஞ்சம் நீயே...

தரணி எல்லாம் தவம் இருந்தும்
உன் அடைக்கலத்தை மட்டும்
தேடிக் கண்டு கொண்ட யாவருக்கும்
நீரே என்றும் தஞ்சம்!!!

இனியபாரதி.

வெள்ளி, 18 ஜனவரி, 2019

தடுமாற்றம்...

என் மாற்றத்திற்கும்
தடுமாற்றத்திற்கும்
அவள் மட்டுமே காரணம்...

இனியபாரதி.