வெள்ளி, 20 ஜனவரி, 2017

நல்லதே நடக்கும்!

இன்றைய பொழுதும் மறக்க முடியாத நாளாகத் தான் இருந்தது. காலையில் எழுந்தது முதல், நான் என் அம்மாவிடம் 'நானும் போராட்டத்தில் கலந்து கொள்ளப் போகிறேன்' என்றேன். அவரும் ஒத்துக் கொண்டார்.

காலை 10 மணிக்குப் போராட்டக் களத்திற்குச் சென்றேன். தேனியில் புது பஸ்டாண்ட் முன்பு நடந்தது. நான் எதிர்பார்த்ததை விட நிறைய பெண்கள் கலந்து கொண்டிருந்தனர். பெண்கள் கூட்டத்தில் ஒரு இடத்தைப் பிடித்து அமர்ந்தேன். அனைவருக்கும் விடுமுறை என்பதால் நிறைய குட்டிக் குழந்தைகள் கூட கலந்து கொண்டனர்.
அங்கு நிறைய பேர் மைக்கைப் பிடித்துப் பேசினர். நிறைய நல்ல விசயங்களைக் கூறினர். சிலர் நமது முதலமைச்சர் மற்றும் பாரதத் தலைவர் அவர்களைப் பற்றியும் சில வேடிக்கையான கோஷங்களை எழுப்பிக் கொண்டிருந்தனர்.

நான் கேட்பதெல்லாம்... 'நமக்கு ஜல்லிக்கட்டு நடக்க வேண்டும். பீட்டா இந்த நாட்டை விட்டு வெளியேற வேண்டும்.'. இதற்கு சரியானத் தீர்வைக் கண்டுபிடிக்க வேண்டும். அதைவிடுத்து தேவையில்லாமல் மற்றவர்களைத் தரக்குறைவாகப் பேசுவது மிகவும் தவறு. அதுவும் அந்தக் கூட்டத்தில் நிறைய பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டிருந்தனர். நாளை பெற்றோர்களைப் பிள்ளைகள் இது போல் பேசுவதற்கு எவ்வளவு நேரம் ஆகும்?

இதைவிட ஒரு கொடுமை என்னவென்றால், வந்திருந்த பாதிப் பேர் தங்கள் ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ்ஸை அப்பேட் செய்வதிலும், வாட்ஸ்ஆப்பில் சேட் பண்ணுவதிலும், செல்ஃபி எடுத்துக் கொள்வதிலுமே தங்கள் நேரத்தைச் செலவிட்டனர். இது போன்ற பொதுக் கூட்டங்களில் இப்படிச் செய்வதை இளைஞர்கள் கொஞ்சம் குறைத்துக் கொள்ளலாம்.

அதைவிடக்கொடுமை... இன்று இரவு ஒரு 8:30 மணிக்கு மறுபடியும் சென்றேன். தேனி பஸ்டாண்டிற்குள் ஜோடி ஜோடியாகச் சுற்றிக் கொண்டிருந்தனர். இப்போது தான் தெரிகிறது... 'பெண்களைப் பெற்றவர்கள் ஏன் வெளியில் விடுவதில்லை என்பதும்... இளைஞர்கள் மீது ஏன் இன்னும் நம்பிக்கை வரவில்லை என்பதும்....'

தயவுசெய்து ஒரு பொதுவான, சமூக நலனுக்காகப் போராடும் போது நம்மை நாமே முதலில் சுயபரிசோதனை செய்து பார்த்துக் கொள்ள வேண்டும்... 'நான் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளத் தகுதியானவளா என்று?'

கண்டிப்பாக ஒரு நல்ல வழிகாட்டி கிடைத்தால், இந்த இளைஞர் கூட்டம் ஒரு நல்ல வழியை நோக்கிச்செல்லும்.

இன்று மாலை ஆலயத்திற்குச் சென்று ஜெபித்தேன். இன்று செபஸ்தியார் திருநாள். எங்கள் உதவிப்பங்குத்தந்தைக்காக சிறப்பாகச் ஜெபித்தோம்.

இப்படி நாட்களைப் பயனுள்ள முறையில் செலவழிப்பது மிகவும் பிடித்திருக்கிறது.

இறைவன் அருள் நம்மோடு!

நன்றியுடன்

இனியா.

கருத்துகள் இல்லை: