ஞாயிறு, 15 ஜனவரி, 2017

ஜல்லிக்கட்டு

ஜல்லிக்கட்டு நடந்தால், கண்டிப்பாக அதைப் பார்க்க வேண்டுமென்று நேற்று முதல் நினைத்துக் கொண்டே இருந்தேன். இன்று அதற்கும் வாய்ப்பு கிடைத்துவிட்டது.

காலை தாராவை அழைத்துக் கொண்டு, எங்கள் ஆலயத்திற்குச் சென்றிருந்தேன். மிகவும் அமைதியாக அமர்ந்து, அங்கு நடக்கும் ஒவ்வொன்றையும் பார்த்துக் கொண்டிருந்தாள். பின், என் தோழிகள் அனைவரிடமும் அவளை அறிமுகம் செய்து வைத்தேன்.

பிடிக்குதோ பிடிக்கலையோ, வேணுமோ வேணாமோ அவளிடமிருந்து வரும் ஒரே பதில் 'Ya... I am fine!'. என்னவோ தெரியவில்லை அவளது எளிமை எனக்கு மிகவும் பிடித்துவிட்டது.

வீட்டிற்கு வந்ததும், அவளும் நானும் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்றை எனக்குப் பரிசளித்தாள். மிகவும் பிடித்திருந்தது.

அத்தோடு இல்லாமல் அவளுடன் சேர்ந்து வெளியில் பேக்கரிக்குச் சென்றேன்.. அதிக நேரம் பேசிக் கொண்டிருந்தோம். அவள் அறைக்கு என்னை அழைத்துச் சென்று, அவள் குடும்பத்திற்காக என்னனென்னவெல்லாம் வாங்கியிருக்கிறேன் என்று என்னிடம் காட்டிக் கொண்டிருந்தாள்.

பின், மாலை வேளையில் எங்கள் பள்ளி துணை முதல்வருடன் சேர்ந்து, வயல்பட்டி என்ற கிராமத்திற்கு தேவராட்டம் பார்ப்பதற்காகச் சென்றிருந்தோம். அங்கு அவர்கள் பூஜை செய்தது, தேவராட்டம் ஆடியது அனைத்தும் மிக அருமையாக இருந்தது. எதிர்பாராத விதமாக அங்கு ஜல்லிக்கட்டும் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.

காளைகளை எல்லாம், ஒரு வெட்ட வெளியாக இருந்த அறையில் அடைத்து வைத்திருந்தனர். ஒரு ஆட்டை வெட்டிப் பலி கொடுத்துவிட்டு, பூஜைகள் எல்லாம் செய்துவிட்டு, அந்த மாடுகளைத் திறந்து விட்டனர். அருகில் இருந்து பார்ப்பதற்கு மிகவும் வியப்பாய் இருந்தது. தாராவும் மிகவும் இரசித்தாள். பின் அருகில் இருந்த வீடுகளுக்குச் சென்றோம். பின் அருகிலுள்ள ஒரு ஆற்றிற்குச் சென்று சிறிது நேரம் விளையாடினோம். அங்கு சூரியகாந்தி மலர்கள் அழகாய் இருந்தன. அதன் அருகில் சென்று ஃபோட்டோ எடுத்துக் கொண்டிருந்தோம்.

அப்போது தொட்டாற்சுருங்கி செடி அருகிலிருப்பதைப் பார்த்து அவளிடம் அதைக் காட்டினேன். அதைப் பார்த்ததும் அவளுக்கு ஒரே ஆச்சரியம். இப்படி ஒரு செடியை அங்கு பார்த்ததே இல்லை என்று சொல்லி, அதை என்னைத் தொடச் சொல்லி, வீடியோவும் எடுத்துக் கொண்டாள். கடைசியாக அவளது நியூசிலாந்து சாக்லேட்டை இருவரும் பகிர்ந்து சாப்பிட்டுக் கொண்டே வீடு வந்து சேர்ந்தோம்.

இந்த வருடம்... பொங்கல் ... எனக்கு ஒரு நல்ல உறவை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது.

அநேக மக்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஒவ்வொரு பொழுதையும் இரசித்தேன்.

என் அன்புக்குரியவர்கள் என்னிடம் பேசாத போது நினைப்பேன்... 'அப்படி என்ன தான் செய்து கொண்டிருக்கிறாயோ?': என்று திட்டுவேன்... இப்படி மற்றவர்களுக்காக நேரம் செலவிடும்போது நமக்கென்று நேரமே கிடைப்பதில்லை என்பதை இந்த மூன்று நாட்களில் உணர்ந்தேன்!

இந்த நாட்களை எனக்கு நல்ல முறையில் அமைத்துக் கொடுத்த இறைவனுக்கு நன்றி!

இனிய இரவு வணக்கங்களுடன்,

இனியா.

கருத்துகள் இல்லை: