திங்கள், 16 ஜனவரி, 2017

காணும் பொங்கல்

மாட்டுப் பொங்கலைப் போல் இந்நாளும் கலகலப்பாகவே இருந்தது. இந்தப் பொங்கல் பண்டிகை வாழ்க்கையில் மறக்க முடியாத பொங்கலாகவே அமைந்தது. காரணம் 'தாரா'. தாராவுடனான இந்த ஐந்து நாட்கள் எனக்கு மிகவும் மகிழ்ச்சியைத் தந்தது. நேற்று இரவு தாராவிடம் இருந்து ஒரு மின்னஞ்சல் வந்தது. 'நான் நாளை மறுநாள் ஊருக்குக் கிளம்புவதால், நாளை மாலை நாம் சந்திக்கலாமா?' என்று அதில் கேட்டிருந்தாள். நாளும் மறுக்காமல் ஒப்புக் கொண்டேன்.
மதியம் சரியாக மூன்று மணிக்குச் சென்றேன். இருவரும் சேர்ந்து ஒரு பேக்கரிக்குச் சென்றோம். அங்கு சரியாக அரைமணி நேரம் அமர்ந்தோம் 'வெறும் ஐஸ்கிரீம் சாப்பிடுவதற்கு....' அவளுடனான அந்த நிமிடங்கள் பேசிக் கொண்டே சென்றது. எப்போதும் புன்னகைத்துக் கொண்டே இருக்க அவளால் மட்டும் எப்படி முடிகிறது என்று யோசித்துக் கொண்டே அவளை இரசித்துக் கொண்டிருந்தேன்.
பின் இருவரும் சேர்ந்து, எங்கள் ஊரின் மிகப் பெரிய கடைத்தெருவான 'பகவதியம்மன் தெருவிற்கு' சென்றோம். என்ன வேண்டுமென்று கேட்டால் 'என்னிடம் எல்லாம் இருக்கிறது!' என்ற பதில் மட்டும் தான் அவள் வாயிலிருந்து வந்தது.
கடைசியாக அவளது தங்கைகளுக்கு, ஸ்டிக்கர் பொட்டு பாக்கெட்டுகள் வாங்கிக் கொடுத்தேன்.. அவளுக்கு விநாயகர் சிலை பிடிக்கிறது என்றாள். அவளுக்கு ஒன்றும், அவள் தங்கைக்கு ஒன்றுமாக இரண்டு நிறங்களில் வாங்கினேன். அவளுக்கு மிகவும் பிடித்த நிறம், ஆரஞ்சு. அந்த நிறத்திலேயே விநாயகர் சிலையும் இருந்தது பார்த்து மகிழ்ந்தாள்.
உன்னுடன் அனுதினமும் இருப்பவர்களுக்கே என்ன பிடிக்குமென்று தெரியாத நீயா தாராவிற்கு என்னவெல்லாம் பிடிக்குமென்று சொல்கிறாய் என்று என் மனச்சாட்சி என்னையே கேள்வி கேட்டுக் கொண்டது. இருந்தாலும், தாராவுடன் இருக்கும் போது என் மனம் ஏதோ என் நெருங்கியவரிடம் இருப்பது போல் இருந்தது. அவளுடன் நேரம் செலவிட வேண்டும் போல் இருந்தது.
கடைசியாக இருவரும் நடந்தே வீட்டிற்கு வந்தோம். அவளுடன் இருந்த ஒவ்வொரு பொழுதும் மறக்க முடியாதவை. என்னை அணைத்துக் கொண்டு அவள் விடைபெற்றாள்.
காணும் பொங்கலன்று நண்பர்களைக் காணச் செல்லலாம் என்ற என் திட்டம் எல்லாம் போய், கடைசியாக தாராவை மட்டுமே கண்டேன்.
இருந்தாலும், என் எல்லா நண்பர்களையும் கண்டு விட்ட மகிழ்ச்சி.
எல்லா நலமும், வளமும் எந்நாளும் அவளுடன் இருக்க தினமும் இறைவனைப் பிராத்திப்பேன்.
இனியா.

கருத்துகள் இல்லை: