இன்று அழகான கதை ஒன்று வாசித்தேன்..
'ஆசிரியர் வகுப்பிற்குள் நுழைகிறார். மாணவர்களுக்குக் கதை சொல்ல ஆரம்பிக்கிறார். ஒரு கப்பலில், ஒரு தம்பதி பயணம் செய்கின்றனர். அப்போது, கப்பல் கவிழும் அபாயமான கட்டத்தில், ஒரேயொருவர் மட்டும் தப்பிக்க வசதியாக, படகு ஒன்று மாத்திரமே இவர்களுக்குக் கிடைக்கிறது.
மனைவியைப் பின்னேத் தள்ளிவிட்டு, கணவன் மட்டும் அந்தப் படகில் தப்பிச் செல்கின்றார். கவிழும் கப்பலின் அந்தரத்தில் இருந்தவாறு தப்பிச் செல்லும் கணவனை நோக்கி, சத்தமாக அந்த மனைவி என்ன சொல்லியிருப்பார்? என்று மாணவர்களை நோக்கிக் கேட்டார், ஆசிரியர்.
எல்லா மாணவர்களும் பலவிதப் பதில்களைக் கூறினர்.
ஒருவன் மட்டும் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தான்.
'ஏனப்பா நீ மிகவும் அமைதியாக இருக்கிறாய்?' என்று ஆசிரியர் கேட்டார்.
'நம்ம குழந்தையை பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுங்கள்' என்று சொல்லியிருப்பார் என்றான், அந்த மாணவன்.
'எப்படி நீ சரியான பதிலைக் கண்டுபிடித்தாய்?' என்று ஆசிரியர் கேட்டார். அதற்கு அவன் 'இல்லை டீச்சர், எங்க அம்மாவும் சாகறதுக்கு முன்னாடி எங்க அப்பா கிட்ட இதையேதான் சொன்னாங்க' என்றான்.
பலத்த மௌனத்திற்குப் பிறகு, ஆசிரியர் கதையைத் தொடர்ந்தார்.
தன் மனைவியின் இறப்பிற்குப் பின், தனி ஆளாக இருந்து, அவர்களது குழந்தையை வளர்த்து வந்தார், தந்தை. அந்தப் பெண் குழந்தை வளர்ந்து, பெரியவளான பல வருடங்கள் கழித்துத் தன் தந்தையின் டைரியைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அவளது தாய்க்கு உயிர் கொல்லி நோய் இருந்தது அப்போது தான் அவளுக்குத் தெரிய வந்தது.
அவள் அப்பா, கப்பல் கவிழ்ந்த சம்பவத்தைக் குறித்து இவ்வாறு எழுதியிருந்தார்.
'உன்னோடு நானும் கடலின் அடியில் சங்கமித்திருக்க வேண்டும்.
நம் இருவரின் மரணமும் ஒரே நேரத்தில் நிகழ்ந்திருக்க வேண்டும்.
நான் என்ன செய்ய?
நம் குழந்தையை வளர்த்தெடுக்க நான் மட்டுமே தப்ப வேண்டியதாயிற்று!'
என்று அதில் எழுதியிருந்தது.
கதையை அத்தோடு முடித்துவிட்டு அந்த ஆசிரியர் கூறினார்....
வாழ்க்கையில் நல்லது, கெட்டது இரண்டும் நடக்கும். எல்லாவற்றிற்கும் காரணம் இருக்கும். சில நேரங்களில் நம்மால் புரிந்து கொள்ள இயலாமல் போகலாம்.
அதனால் நாம் ஆழமாக யோசிக்காமலோ, சரியாகப் புரிந்துகொள்ளாமலோ யாரைப் பற்றியும் முடிவிற்கு வந்துவிடக் கூடாது.
நம் நண்பர்களுடன் உணவருந்த வெளியே செல்லும் போது, அவன் நமக்கும் சேர்த்துப் பணம் செலுத்துகிறான் என்றால், அவன் பணக்காரன் என்று அர்த்தமில்லை... அவன் பணத்தை விட 'நம் நட்பை உயர்வாக மதிக்கிறான்' என்று அர்த்தம்.
முதலில் மன்னிப்புக் கேட்கிறார்கள் என்றால், அவர்கள் தான் தவறு செய்தவர்கள் என்று அர்த்தமில்லை... 'ஈகோ' வை விட 'நம் உறவை உயர்வாக மதிக்கிறார்கள்' என்று அர்த்தம்.
நாம் கண்டுகொள்ளாமல் இருந்தாலும், நமக்கு கால் பண்ணி பேசினால், அவர்கள் வெட்டியாக இருக்கிறார்கள் என்று அர்த்தமில்லை... நாம் 'அவர்களுடைய மனதில் இருக்கின்றோம்' என்று அர்த்தம்.
பின்னொரு காலத்தில் நம் பிள்ளைகள் நம்மிடம் கேட்கும் 'யாருப்பா அந்தப் ஃபோட்டோவில் உள்ளவர்கள்' என்று...
ஒரு கண்ணீர் கலந்த புன்னகையோடு நாம் சொல்லலாம் 'அவர்களுடன் தான் என் சில நல்ல தருணங்களை நான் கழித்திருக்கிறேன்' என்று...
இந்தக் கதையில் வரும் அம்மா, தன் உயிரைத் தியாகம் செய்தார்.
ஆனால், அப்பாதான் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறார். தன் குழந்தைக்காக, மறுமணம் கூட முடிக்காமல், அவளை வளர்ப்பதில் கண்ணும் கருத்துமாக இருந்திருக்கிறார்.
அவர் தான் இன்றைய வலைப்பதிவின் நாயகன்.
மேற்சொன்ன ஆசிரியரின் கூற்று, நம் ஒவ்வொருவர் வாழ்விலும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையுடன்...
இனிய இரவு வணக்கங்களுடன்,
இனியா.