'இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயஞ் செய்து விடல்'
என்றொரு அழகான திருக்குறளைக் கொடுத்த நம் திருவள்ளுவருக்கு, முக்கியமாக இந்த நேரத்தில் நன்றி சொல்ல வேண்டும்.
நமக்குத் தீமை செய்தவருக்குக் கூட, நாம் நன்மை தான் செய்ய வேண்டுமாம்! இது உண்மையிலேயே மிகவும் கடினமான செயல் தான்!
திருக்குறளைப் படிக்கும் போது, அநேக நேரங்களில் எனக்குள் எழும் கேள்விகள் பல...
திருவள்ளுவர் எப்படி வாழ்ந்திருப்பார்?
அவர் எழுதிய எல்லாவற்றையும், அவரும் கடைபிடித்திருப்பாரா?
உண்மையில் இவ்வளவு நல்லவராக இருந்திருப்பாரா?
இன்னும் நிறைய கேள்விகள்.. நானும் பல நேரங்களில் வலைப்பதிவில் எழுதுவேன்.. ஆனால், அதைப் பல நேரங்களில் கடைபிடிக்கத் தவறிவிடுவேன். இந்தத் திருவள்ளுவர் மட்டும், எப்படி இத்தனை விசயங்களையும் கடைபிடித்திருப்பார் என்று தான் புரியவில்லை...
தனக்குத் தீங்கு செய்தவருக்கு, நானும் தீங்கு செய்யாமல், நன்மை செய்யும் போது, அவர் நம் செயலால் வெட்கி நாணுகிறார். எவ்வளவு நிதர்சனமான உண்மை...
நாமும் பல நேரங்களில், சிலர் செய்த தவறுகளை மட்டும் நினைத்துக் கொண்டு, அவருடன் பேசாமல் பழகாமல் இருக்கிறோம்.. அப்படிப்பட்ட நேரங்கள் நம் வாழ்வில் இருந்தால், அதைக் களைந்து, நாம் அவர்கள் வெட்கும் படியாகச் செய்வோம்..
இனிய இரவு வணக்கங்களுடன்,
இனியபாரதி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக