செவ்வாய், 21 பிப்ரவரி, 2017

சர்வதேச தாய்மொழி பேசும் நாள்...

இன்று, சர்வதேச அளவில், தங்கள் தாய்மொழியில் பேசுவதற்காக ஒதுக்கப்பட்ட நாள். இந்த நாளையும், இந்த நாள் வந்ததற்கான பின்னணியையும் படித்த போது வியந்தேன். முதல் முறை இதைப் பற்றிக் கேள்விப்படுகிறேன். இதைப் படித்த போது பெருமையடைந்தேன். நானும், என் தாய்மொழியில், அழகாக பேசவேண்டுமென்று நினைத்து, என் தங்கையிடம் சிறிதுநேரம் பேசிவிட்டுத் தொலைக்காட்சிப் பெட்டியின் முன் அமர்ந்தேன்.

மிகவும் பிரபலமான ஒரு தொலைக்காட்சி சேனல்... பாடல் போடுவதற்கு முன் ஃபோனில் பேசுவார்களே!!! அந்த நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. அந்த நிகழ்ச்சியில் பேசிக் கொண்டிருந்த பெண், தான் தமிழில் பேசப் போவதாகச் சொல்லி ஆரம்பித்தார். ஆரம்பித்த முப்பது நொடிகள் தான் அதைப் பார்க்க முடிந்தது. தமிழில் இந்த அளவிற்கு இவர் மட்டும் தான் பேசுவார் போல... நல்ல வேளை... பாரதியோ... வேறு கவிஞர்களோ... இவள் பேச்சைக் கேட்கவில்லை... கேட்டிருந்தால் தூக்குப் போட்டு இன்றே இறந்திருப்பார்கள்...

இதில்... நம் தாய்மொழிப்பற்று எப்படி இருக்கிறது பாருங்கள்... என் வகுப்பில் குழந்தைகளிடம் 'எத்தனை பேருக்குத் தமிழ் பிடிக்கும்?' என்று கேட்டேன். ஒரு மாணவன் மட்டும் கை உயர்த்தினான். 'ஏன் தம்பி உனக்குத் தமிழ் பிடிக்கும்?' என்றேன். 'என் அம்மா எனக்குத் தமிழ் கதைகள் சொல்லித் தருவார். அதனால் எனக்குப் பிடிக்கும்.' என்றான்.

இப்படித் தான் நம் தாய்மொழியை நேசிக்கிறோம்! வெளியிடங்களுக்குச் சென்றாலும், ஆங்கிலத்தில் உரையாடுவதையே விரும்புகிறோம்.
அயல்மொழி தேவைதான். ஆனால், தாய்மொழியின் மீதுள்ள பற்று குறையக்கூடாதே!

தன் தாய்க்கும், பெரியம்மாவிற்கும் உள்ள வித்தியாசம் தான் தாய்மொழிக்கும் பிற மொழிகளுக்கும் உள்ள வித்தியாசம்....
என்ன தான் பெரியம்மாவோ, சித்தியோ நம்மை வளர்த்தாலும், தாயானவள் காட்டக் கூடிய அன்பைக் காட்ட முடியாது. அதைப் போலத் தான், நம் தாய் மொழிப்பற்றும் இருக்க வேண்டும்!

இனிய இரவு வணக்கங்களுடன்...

இனியபாரதி.

கருத்துகள் இல்லை: