வெள்ளி, 24 பிப்ரவரி, 2017

என்ன தான் செய்ய?

இன்று சுஜாதா அவர்கள் எழுதிய 'ஜன்னல்' படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. நான்கு பக்கக் கதை தான். அதில் ஆயிரம் அர்த்தங்கள்.

நாம் தினமும் காலையிலிருந்து மாலைவரை என்ன செய்கிறோம்!?

காலை எழுந்ததிலிருந்து இரவு தூங்கச் செல்லும் வரை அனுதினமும்,  ஏறக்குறைய ஒரே வேலையைத் தான் செய்கிறோம். இதனால், சில நேரங்களில் விரக்தியடைந்து, தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு வந்துவிடுகிறோம். இதைப்போல ஒரு கதாப்பாத்திரம் தான் அந்தக் கதையில் விளக்கப்பட்டிருந்தது.

இன்றைய நாட்களில் முக்கியமாக நாம் கருத்தில் கொள்ள வேண்டியது... நாம் நேரத்தைச் செலவிடும் முறை...
சில நேரங்களில் வெளியில் நிறைய நண்பர்கள் இருப்பார்கள்.. நன்றாக ஊர் சுற்றுவோம்... ஆனால், வீட்டில் யாருடனும் பேச மாட்டோம்.

சிலர் வீட்டில் அனைவரிடமும் நன்றாய்ப் பேசுவார்கள். வெளியில் சென்றால் வாய் திறக்க மாட்டார்கள்.
இன்னும் சிலர் வீட்டிலும் சரி, வெளியிலும் சரி... வாய் திறந்தால் மூட மாட்டார்கள்.

அனைவரிடமும் கலகலப்பாக பேசக்கூடிய பழக்கம் நல்லது தான்.
அதுவும் நம் அன்றாட வேலைகளில், நாம் சந்திக்கும் ஒவ்வொருவரும், ஏதோ ஒரு வகையில் நம்மில் தாக்கத்தை ஏற்படுத்துபவர்கள் தான். அவர்களுடன் பேசும் போது, நம் மனம் லேசானது போல் உணரலாம். இல்லை... அவர்களுக்கு நம் பேச்சு பிடித்திருக்கலாம்.. இதனால் அவர்கள் மனம் லேசாக வாய்ப்பு இருக்கிறது...

வெளியில் எங்கு சென்றாலும், நம் கண்கள் நோக்குவது ஒன்றை மட்டும் தான்...
'அலைபேசி'

என் சிறுவயது நாட்களை நினைத்துப் பார்க்கிறேன்...

ஓடியாடி விளையாடிய காலங்கள்...

கூடிச் சேர்ந்து மொட்டை மாடியில் ராஜா ராணி விளையாடிய காலங்கள்...

கோயில் கட்டிக் கும்பிட்ட காலங்கள்...

சோறு வடித்து பரிமாறின காலங்கள்...

எல்லாம்... மலையேறி விட்டன...

இப்போதெல்லாம் தனிமை மட்டும் தான்... வீட்டில் தனிமை... நண்பர்களுடன் சேராத்தனிமை... உறவுகளுடன் இணையாத் தனிமை... எங்கும் தனிமை... எதிலும் தனிமை... அதை மட்டுமே மனம் விரும்புகிறது!

இதில் எப்படி நம் வழக்கத்தை மாற்றிக் கொள்வது?

நம்மை நாமே மெழுகேற்றிக் கொள்வது?

'சோம்பேறியாய் வீட்டில் அடைந்து கிடக்காமல், சுறுசுறுப்பாய், எப்போதும் வேலை இருப்பது போலவே நம்மை வைத்துக் கொள்வது தான், ஒரே வழி!'

என்ன தான் செய்ய?

இனியபாரதி.

கருத்துகள் இல்லை: