இன்று ஒரு அழகான ஹிந்தி படம் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த நாளில் நான் இந்த படத்தைப் பார்த்தது, இந்த படத்தைப் பற்றிப் பேசத் தூண்டுகிறது. சிறு வயதிலேயே பெற்றோரை இழந்த கதாநாயகி, தன் சித்தப்பாவின் வீட்டில் வளர்கிறாள். இவள் மிகவும் அழகானவள் என்பதால் இவள் சித்திக்கு இவளைப் பிடிக்காது. ஆனால், இவள் வீட்டிலுள்ள அனைவர் மேலும் அன்புடன் இருப்பாள். இவளும், சித்தியின் மகளும் வளர்ந்து பெரியவளான பிறகு, இவளுக்கு மணமகன் தேடும் படலம் ஆரம்பிக்கிறது. அது சித்திக்குப் பிடிக்கவில்லை... தனக்கும் ஒரு மகள் இருக்கிறாள்.. அவளை எப்படி கரைசேர்ப்பது என்று சித்தப்பாவைத் திட்டுகிறாள்... அந்த நேரத்தில் டெல்லியிலிருந்து, ஒரு பெரிய இடத்தில் சம்பந்தம் அமைகிறது. கதாநாயகன் அவளைப் பார்க்க வருகிறார். இருவருக்கும் பிடித்துவிடுகிறது. திருமணமும் நிச்சயிக்கப்படுகிறது. ஆனால், இது அவள் சித்திக்கு கொஞ்சம் கூடப் பிடிக்கவில்லை. அதனால் அவளை எப்போதும் திட்டிக் கொண்டே இருக்கிறார். திருமணத்திற்கு முந்தைய நாள் கூட, அவள் சித்தி எந்த ஒரு வைபவத்திலும் கலந்து கொள்ளாமல் இருப்பாள். இதைப் பார்த்து அழுதுகொண்டே தன் அறையில் படுத்திருப்பாள், நாயகி. திடீரென எதிர்பாராமல் ஏற்பட்ட தீ விபத்தில் அவளும், சித்தியின் மகளும் மாட்டிக் கொள்வார்கள். கதாநாயகி தன் உயிரைக் கூட பொருட்படுத்தாமல் தங்கையைக் காப்பாற்றுவாள். அதில், அவள் முகம் தவிர உடலெங்கும் தீக்காயம் ஆகிவிடும். அடுத்த நாள் திருமணம். ஆனால், அவள் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருப்பாள். தன் தவறை உணர்ந்து சித்தி அழுவாள். கதாநாயகன் அவள் உடல் முழுவதும் காயப்பட்டிருந்தாலும், எனக்கு இவள் தான் வேண்டும் என்று மருத்துவமனையிலேயே இவளைத் திருமணம் செய்து கொள்வான்..
இது தான் இந்தப் படத்தின் சுருக்கம்...
எனக்கு அந்தக் கதாநாயகன்,கதாநாயகியிடம் இரண்டு விசயங்கள் பிடித்தன...
ஒன்று... கதாநாயகிக்குத் தன் குடும்பத்தின் மீதிருந்த அன்பு...
என்ன தான் சித்தப்பா குடும்பமாக இருந்தாலும், அவர்கள் மீது அவள் காட்டிய அன்பு அளவிட முடியாதது.
இரண்டு... கதாநாயகனுக்குக் கதாநாயகியின் மீதிருந்த அன்பு...
கதாநாயகியின் அழகை மட்டும் பார்த்து, அவன் விரும்பியிருந்தால் கண்டிப்பாக, அவன் திருமணம் செய்து கொள்ளச் சம்மதித்திருக்க மாட்டான். ஆனால், அவன் அவளை முழுமையாக நேசித்தான். என்ன ஆனாலும், அவள் தான் என்னவள் என்பதில் உறுதியாக இருந்தான்.
என்ன தான் கதையாக இருந்தாலும்... இந்த இருவரும் தாங்கள் கொண்டிருந்த அன்பில் நிலைத்திருந்தனர்.
படத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, என்னை அறியாமல் கண்களில் நீர் வழிந்து கொண்டிருந்தது.
உலகத்தில் பணம், பொருள், பதவி இவைகளைத் தாண்டி அனுபவிக்க எவ்வளவோ விசயங்கள் உள்ளன. ஆனால், நம் உள்ளம் நோக்குவது என்னவோ இந்த மூன்றை மட்டும் தான்...
இந்தக் காதலர் திருநாளில், அன்பின் அர்த்தத்தை உணர வழி தேடுவோம்....
நாமும் ஏனோ தானோ வென்று நம் வாழ்க்கையை நடத்தாமல்...
அன்பாய்...
அன்பிற்காய்...
அன்புடன்...
நம் அன்பிற்குரியவர்களிடம்...
இருப்போம்!!
இனிய காதலர் தின நல் வாழ்த்துகள்!
இனியபாரதி.