வியாழன், 5 நவம்பர், 2015

நல்லவனாய்(ளாய்) இருக்கமுடியாதா?


திருவிவிலியத்தில்(பைபிளில்) ஒரு அழகான கதை இருக்கிறது. ஒரு நிலக்கிழார், தன் திராட்சைத் தோட்டத்தில், வேலைக்கு ஆள்களை அழைப்பதற்காக, விடியற்காலையிலே எழுந்து வெளியே செல்வார். ஒரு நாளைக்கு, ஒரு தெனாரியம்(அவர்கள் ரூபாயின் மதிப்பு- உதாரணத்திற்கு 100 ரூபாய் என்று எடுத்துக் கொள்வோம்) வீதம் தருவதாக ஒப்புக் கொண்டு சிலரைத் தன் தோட்டத்திற்கு அனுப்பி வைத்தார். அதன் பின், ஒன்பது மணிக்கும் வெளியே சென்று சந்தை வெளியில் சிலர் வேலையின்றி நிற்பதைக் கண்டு, நீங்களும் என் தோட்டத்திறகுச் சென்று வேலை செய்யுங்கள். உங்களுக்கு நியாயமான கூலியைத் தருவேன் என்று கூறி அனுப்பி வைக்கிறார். இதேபோல், பன்னிரண்டு மணிக்கும், மூன்று மணிக்கும், ஐந்து மணிக்கும் முறையே வெளியே சென்று வேலையாட்களைத் தன் தோட்டத்திற்கு அனுப்பி வைத்தார். 
மாலையானதும் தன் மேற்பார்வையாளரிடம் (சூப்பர்வைசர்) ,வேலையாட்களை அழைத்து கடைசி வந்தவர் தொடங்கி, முதலில் வந்தவர் அனைவருக்கும் கூலியைக் கொடுக்கும் படி பணித்தார். 
ஐந்து மணியளவில் வந்தவர்களுக்கு 100 ரூபாய் கொடுக்கப்பட்டது. அப்போது முதலில் வந்தவர்கள் தங்களுக்கு அதிகம் கிடைக்கும் எனத் தங்கள் மனதில் எண்ணிக் கொண்டிருந்தனர். ஆனால், அவர்களுக்கும் 100 ரூபாயே கொடுக்கப்பட்டது. 
கடைசியில் வந்தவர்கள் தங்கள் கூலியைப் பெற்றுக் கொள்ளும் போது, அந்த நிலக்கிழாருக்கு எதிராக முணுமுணுத்து, "கடைசியில் ஐந்து மணிக்கு வந்தவர்கள் ஒருமணி நேரமே வேலைசெய்தனர். காலை முதல் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வேலைசெய்த எங்களையும் இவர்களோடு இணையாக்கி விட்டீரே" என்று புலம்பினர். 
அந்தத் தோட்டத்து உரிமையாளரோ, அவர்களைப் பார்த்து...." நண்பரே...நான் உனக்குத் துரோகம் செய்யவில்லை. நீர் என்னிடம் 100 ரூபாய்க்குத் தான் வேலை செய்ய ஒப்புக் கொண்டீர். 'உமக்குரிய ஊதியத்தை நான் கொடுத்து விட்டேன்.பெற்றுக் கொண்டுபோய்விடும். உமக்குக் கொடுத்தது போலவே கடைசியில் வந்தவருக்கும் கொடுப்பது என் விருப்பம். எனக்குரியதை என் விருப்பப்படி கொடுப்பதற்கு எனக்கு உரிமை இல்லையா? நான் நல்லவனாய் இருப்பதனால் உமக்குப் பொறாமையா?'" என்று அந்தநிலக்கிழார் கூறுவது போல் கதை முடிவு பெறும்.
இந்தக் கதை, திடீரென என் மனதில் ஒரு உந்துதலை ஏற்படுத்தியது. 
இதில் நான் புரிந்து கொண்ட விசயம், ஒன்றே ஒன்று தான். "அந்தத் தோட்டக்காரர் தன்னுடையதைக் கொடுக்கிறார். தான் கூறியபடியே முதலில் வந்தவர்களுக்கு 100 ரூபாய் கொடுத்துவிட்டார். மற்றவருக்கும் கொடுப்பது அவர் விருப்பம்.
அவர் நல்லமனதைக் காட்டுகிறது."
இந்தக் கதையின் அர்த்தத்தை ஒரு ஐந்து வருடங்களுக்கு முன்பு தியானித்திருந்தால் என் வாழ்வில் சிலமாற்றங்கள் ஏற்பட்டிருக்குமோ என்றுதான் தோன்றியது.
நம் வாழ்விலும், பலநேரங்களில் நமக்கும் எல்லாம் கிடைக்கும். இருந்தும், அவளுக்கு இது கிடைத்துவிட்டதே..

"அவள் படிக்கவே மாட்டாள்.. அவளுக்குஅரசாங்கவேலைகிடைத்துவிட்டதே..

அவள் அழகாய் இருக்கவே மாட்டாள்.. அவளுக்கு அழகான கணவன் கிடைத்து விட்டாரே...

அவன் சிறதும் உழைக்காமல் எப்படி இவ்வளவு வசதிகளுடன் வாழ்கிறான்.. நானும் படாத பாடுபட்டு உழைக்கிறேன், என்னால் சொந்த நிலம் கூட வாங்க முடியவில்லையே...


அவன் செய்வதெல்லாம் தீமை. ஆனால் அவனுக்கு மட்டும் நல்லது நடக்கிறதே..."

என்று நம் மனம் சிலநேரம் அங்கலாய்க்கும்.
இதில் கூட இறைவனின் விருப்பம் தான் இருக்கிறது.
இந்தக் கதையில் வரும் நிலக்கிழார் தான் இறைவனாக உருவகப்படுத்தப்படுகிறார்.

இறைவனும் நமக்கு வாக்களித்த கூலியை நமக்குக் கொடுத்துக் கொண்டேதான் இருக்கிறார். நம் கூலியை முழுமையாக அனுபவிப்பதை விட்டுவிட்டு 'அடுத்தவர் கூலி என்னை விட அதிகமாக இருக்கிறதே.. அதை எப்படி எனதாக்கிக் கொள்ளலாம். அல்லது அவரிடமிருந்து எப்படி அதைப் பெற்றுக் கொள்ளலாம்' என்றெல்லாம் யோசிப்பதை விட்டுவிட்டு, இன்று இந்த நொடியை நான் எப்படிவாழ்கிறேன் என்பதில் நம் மனத்தைச் செலுத்துவோம்.
எதையும் கொடுப்பதில் தான் இன்பம்!
பெறுவதினால் துன்பமே.

கருத்துகள் இல்லை: