சனி, 31 டிசம்பர், 2016

ஒளியூட்ட...

இந்த வருடத்தின் இறுதி நாள். இந்த நாள் பெரும்பாலானவர்களுக்கு வேலைப்பளு நிறைந்த நாளாகத் தான் இருந்திருக்கும்.. பெண்கள் இன்று வீட்டைச் சுத்தம் செய்வார்கள்... ஆண்களும் அவர்களுக்குத் துணையாக இருப்பார்கள்.

இன்றைய தினத்தைப் பற்றிச் சிறப்பாகச் சொல்ல வேண்டுமானால்... இன்று தான் இந்த வருடம் முழுவதும் நடந்த நிகழ்ச்சிகளை எல்லாம் அசைபோட்டுப் பார்ப்போம். அடுத்த வருடம் இதை எல்லாம் செய்வேன் என்று சில குறிக்கோள்களையும் அமைத்துக் கொள்வோம்.

இந்த வருடம் முழுவதும் என்னோடு சுகத்திலும், துக்கத்திலும் பங்கெடுத்த என் இறைவனுக்கு என் முதல் நன்றி. என் குழப்பங்களில் எனக்குத் தெளிவைத் தந்ததற்காகவும் நன்றி.

அடுத்து... நான் இந்த அளவு வளர எனக்குத் துணையாக... என் நிழலாக இருக்கும் என் செல்லம்மா... அம்மா... அப்பா... தங்கை... உறவினர்கள்... நண்பர்கள்... என வரிசை நீண்டு கொண்டு தான் செல்கிறது.

இந்த வருடம் நன்றாகத் தான் சென்றது. கொஞ்சம் சாதனைகள்... நிறைய சோதனைகள்.. ஆனாலும், சோதனையிலும் தளர்வுறாமல் இருக்க உதவி செய்த இறைவன்... இப்படி நன்றாகத் தான் இருந்தது.

அடுத்த வருடமும் நல்ல முறையில் செல்லும் என்று நம்புகிறேன். எனக்கு மட்டுமல்ல... தன் உழைப்பினால் சம்பாதித்து... மற்றவர்கள் வயிற்றில் அடித்து வாழாமல்... சகோதரத்துவத்துடன் வாழும் ஒவ்வொருவருக்கும், ஒவ்வொரு வருடமும் நல்ல முறையில் தான் அமையும்.

'ஒளியூட்ட' என்ற தலைப்பு எதற்கு? அடுத்த வருடம் நான் எடுத்திருக்கும் விருதுவாக்கு... 'நான் துன்பத்தில், கஷ்டத்தில் இருந்தாலும் பரவாயில்லை... மற்றவர் என்னால் பாதிக்கப்படக் கூடாது' இதனால் மற்றவர்கள் வாழ்வில் எப்போதும் வெளிச்சத்தைக் கொடுப்பவளாக மட்டும் இருக்க வேண்டும் என்பது தான் இந்தப் புத்தாண்டிற்கு நான் எடுத்திருக்கும்... நான் கடைபிடிக்கப்போகும் வாக்கு.

அனைவருக்காகவும் இறைவனைப் பிராத்திக்கிறேன்.. எல்லாம் வல்ல இறைவன் நம் அனைவரோடும் இருந்து அவரது அன்பின் பாதையில் அனுதினமும் வழிநடத்துவாராக!

அனைவருக்கும் அன்பின் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

இனியா.

வெள்ளி, 30 டிசம்பர், 2016

எல்லாம் நீயே...

தினந்தோறும் கதைகளைக் கேட்டுக் கொண்டே இந்த விடுமுறை நாட்கள் செல்கின்றன.

ஒரு துறவியை செல்வந்தர் ஒருவர் சந்திக்கச் சென்றாராம். அந்தத் துறவியிடம் 'எனக்கென பணம்,புகழ், பதவி, செல்வம் என்று எல்லாம் இருக்கின்றன. ஆனால், என் குடும்பத்தில் மட்டும் சந்தோசம் இல்லை.. எனக்கொரு வழி கூறுங்கள்' என்று கேட்டாராம். அதற்குத் துறவி ஒரு காதிதத் துண்டில் 'இறைவன்' என்று எழுதி, அதை அந்தச் செல்வந்தரிடம் கொடுத்து வாசிக்கச் சொன்னார். அவரும் வாசித்தார். அந்தச் செல்வந்தரிடம் ஏதாவது பணம் வைத்திருந்தால் எடுங்கள் என்றார், துறவி. அவரும் அவரிடம் இருந்த இரண்டாயிரம் ரூபாய் நோட்டை எடுத்து நீட்டினார். துறவி அந்த ரூபாய் நோட்டைக் கீழே வைத்துவிட்டு, அதன் மீது தான் எழுதிய அந்தக் காகிதத்தை வைத்தார். இந்த காகிதத் துண்டில் என்ன எழுதியிருக்கிறது என்பதை உங்களால் வாசிக்க முடிகிறதா? என்று கேட்டார். ஆம்... முடிகிறது... 'இறைவன்' என்றார்.

பின் அந்தக் காகிதத்தைக் கீழே வைத்து, அதன் மீது அந்த ரூபாய் நோட்டை வைத்தார். இப்போது தெரிகிறதா அதில் என்ன எழுதியிருக்கிறதென்று?' என்றார் துறவி. 'ஒன்றும் தெரியவில்லை' என்றார் அந்தச் செல்வந்தர்.

அந்த நொடி ஞானம் பெற்றுக் கடந்து போனார், அந்தச் செல்வந்தர்.

முதலில் இறைவனை வைக்கும் போது அவர் நமக்குத் தெளிவாய்த் தெரிவார். ஆனால், நாம் பணத்திற்கு மதிப்புத் தந்து அதை முன்னிருத்தும் போது அவர் தெரிவதில்லை. இறைவனை முன்னிருத்தி நாம் செய்யும் அனைத்துக் காரியங்களிலும் நமக்கும் வெற்றியும் சந்தோசமும் சமாதானமும் கிடைக்கும்.

இன்று திருக்குடும்பத்திருநாளைக் கொண்டாட நம்மை அழைக்கிறது, நம் திருச்சபை. குடும்பத்தில் முக்கியப் பங்கு வகிப்பவர், தந்தை. நாம் எவ்வளவு பெரிய மனிதர்களாக வேண்டுமானாலும் இருக்கலாம். இறைவனை நம் குடும்பத்தின் தலைவராக ஏற்றுக் கொண்டு, அவர் பாதையில் நம்மை வழிநடத்தும் நம் தந்தைக்கும் தாய்க்கும் கீழ்படிந்து வாழ்ந்து நம் திருக்குடும்பத்தின் மூலமாக மற்றவர் ஆசீர் பெற இந்த நாள் ஒரு தூண்டுகோலாக இருந்தது.

உம்மையே எங்கள் குடும்பத்தின் தலைவராக ஏற்று, உம் பாதையில் என்றும் உமக்கேற்ற பிள்ளைகளாய் வாழ வரம் தாரும் இறைவா!

திருக்குடும்பத் திருநாள் வாழ்த்துகள்!

இனியா.

வியாழன், 29 டிசம்பர், 2016

மீனு...

கல்லூரியில் படிக்கும் போது எனக்கு ஒரு பேராசிரியரை மிகவும் பிடிக்கும். கல்லூரியில் மூன்றாமாண்டு படிக்கும் போது தான் எனக்கு அவருடன் பழக்கம் ஏற்பட்டது. அடிக்கடி அவரைப் பார்க்கச் செல்வேன்.. அவருடன் இணைந்து வெளியில் சென்ற தருணங்கள் பல... விடுதியில் சொல்லாமல் கூட, அவருடன் வெளியில் சென்றுள்ளேன்.. அவரது நிச்சயதார்த்தத்திற்குக் கூட நான் சென்றிருந்தேன்.. அன்று இரவு அவருடன் அருகில் இருந்து அனைத்தையும் பார்த்துக் கொண்டது.. அதன் பிறகு நிறைய நாட்கள் விடுதியில் பிராக்ஜெட் பண்ணப் போகிறேன் என்று சொல்லிவிட்டு ஞாயிறானால் அவரது வீட்டிற்குத் தான் செல்வேன்...

இன்று அதை எல்லாம் நினைத்துப் பார்க்கும் போது.... சிரிப்பாக இருக்கிறது!

இன்று எதேர்ச்சையாக என் அலைபேசிக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது... அது யாரென்று எனக்குத் தெரியவில்லை... யாரென்று கேட்டு நானும் அனுப்பியிருந்தேன்.. பதில் உன் கல்லூரிப் பேராசிரியர்..... என்று வந்திருந்தது... அதைப் பார்த்ததும் என்னைச் சுற்றி ஆயிரம் பட்டாம் பூச்சிகள் வட்டமிட்டது போல் இருந்தது..

உடனே அழைத்தேன்.. அழைப்பை எடுக்கவில்லை... சிறிது நேரத்திற்குப் பின் அவரே அழைத்தார்... நான் எடுக்கவில்லை.... மறுபடியும் நான் அழைத்தேன்... அவர் எடுக்கவில்லை... கடைசியாக அவர் அழைத்தார்... எடுத்துப் பேசினேன்... இன்னும் என் மீனுவும்... அவள் குரல் கூட மாறவில்லை... அவளது ஆங்கில உரையாடல்கள் கூட அப்படியே இருந்தது....

பார்க்க வேண்டும் போல் ஆவலாகத் தான் இருக்கிறது... என்று பார்ப்பேனென்றுத் தெரியவில்லை???

இதில்... என் செல்லம்மாவும் என்னுடன் பேசியது கூடுதல் மகிழ்ச்சியைத் தந்தது.. இந்த நாள் அப்படியே இருந்துவிடக் கூடாதா என்று எண்ணத் தோன்றுகிறது!

கடந்த நாட்களை நினைத்துப் பார்க்க எனக்கு ஒரு தருணத்தைத் தந்ததற்கு நன்றி இறைவா!

என்னையும் பொருட்படுத்த என் செல்லம்மாவிற்கு நேரம் கொடுத்ததற்கு நன்றி!

இனியா.

புதன், 28 டிசம்பர், 2016

மாசில்லா குழந்தைகள்...

இன்று மாலை ஆலயத்திற்குச் சென்றிருந்தேன். இன்று 'மாசில்லா குழந்தைகள்' நவநாள் திருப்பலியுடன் சேர்த்து கொண்டாடப்பட்டது. மாசில்லா குழந்தைகள் - குழந்தைகளுக்காகச் சிறப்பாகச் ஜெபிக்கப்பட்டது.

இன்றைய தின மறையுரையும் அழகாக, சிந்திக்க வைக்கக் கூடியதாக இருந்தது. 'எதையும் நேர்மறையாகச் சிந்திக்கக் கூடிய ஒரு சிறுவன்'.... என்று தான் மறையுரையை ஆரம்பித்தார், அருட்தந்தை. சிறுவன் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கிறான். அவன் பள்ளியில் ஆண்டுவிழா நடைபெறவிருந்த நேரம். அவனுக்கு ஆண்டுவிழா நாடகத்தில் கலந்துகொள்ள வேண்டுமென்று ஆசை. அதைத் தன் பெற்றோர்களிடம் கூறுகிறான். அவர்களும் சம்மதிக்கிறார்கள். ஆனால், அவனால் அவ்வளவு சுலபமாக மேடையில் பேசிவிட முடியவில்லை. அதனால் அவனது ஆசிரியர்கள் அவனை நாடகத்திலிருந்து விலக்கி விடுகிறார்கள்... மாலை வீடு வந்ததும், அவன் அம்மா அவனிடம் அன்று நடந்தவைகளைப் பற்றிக் கேட்கின்றார். அவன், 'இந்த வருடம் நாடகத்தில் நான் நடிக்கவில்லை அம்மா... ஆண்டுவிழாவில் பார்வையாளராக இருந்து நடிப்பவர்களை ஊக்குவிக்கப்போகிறேன்'.... என்று சொன்னான்... கதை அவ்வளவு தான்...

கதையிலிருந்து புரிந்து கொண்டது... தனக்கு நல்லது நடக்கவில்லை என்றாலும், அதை எதிர்மறையாக நினைத்து வருத்தப்படாமல் அதையும் தனக்கு சாதகமாக நேர்மறையாக ஆக்கிக் கொண்டான், அச்சிறுவன்.

அவனைப் போல நாமும் எல்லாச் சூழ்நிலைகளிலும் நேர்மறையாகச் சிந்திக்க வேண்டும் என்று இன்றைய மறையுரையை ஆரம்பித்தார், தந்தை.

குழந்தைகள் - கள்ளம் கபடமற்ற மனம்..... சிரிப்பு...

'எந்தத் துன்பம் வந்தாலும் எந்தன் அன்பு மாறாது' என்ற பாடல் வரி ஞாபகம் வந்தது.

குழந்தை மனம் வேண்டிவந்தேன் இன்று...

எனக்குரியதை மற்றவர்கள் எடுத்துக் கொண்டாலும், அதை நேர்மறையாக எண்ணி, எனக்கென நீர் வைத்துள்ள பொக்கிஷத்திற்காய் காத்திருப்பேன்...

குழந்தை மனம் தாரும் இறைவா!

ஒவ்வொரு தருணமும் நேர்மறையாக சிந்திக்க என்னுடன் இருந்து வழிநடத்தும்!!

இனியா....

ஞாயிறு, 11 செப்டம்பர், 2016

மகாகவி...

இன்று செல்லம்மாவின் கணவர், பாரதியின் இறந்த நாள்.. அதாவது, நமது நாட்டுப் பெண்களைப் பற்றிப் புரட்சிப்பாட்டு பாடிய அதே மகாகவி பாரதியின் இறந்த நாள்.. பாரதியை எந்த அளவு நான் போற்றுகிறேனோ, அதே அளவிற்குச் செல்லம்மாவையும் எப்போதும் நினைத்துப் பார்ப்பேன்... என் மனதில் ஒரு தனி இடத்தைப் பிடித்தவள் இந்தச் செல்லம்மா...

கணவனை எதிர்த்து ஒரு வார்த்தை கூட பேசாதவளாக... தன் கணவனின் கட்டளைகளுக்குக் கீழ்படிந்தவளாக... அன்பானவளாக... இப்படி எந்தக் கோணங்களில் பார்த்தாலும் செல்லம்மா ஒரு அழகி.

நம் நண்பர்கள் நம்மை விட்டுப் பிரிந்துவிட்டாலே அந்தச் சோகத்தை மறக்க மாதங்கள் ஆகின்றன... தன் கணவன் இறந்துவிட்ட சோகத்தை அவள் எப்படித் தாங்கியிருந்திருப்பாள்? அதுவும் உதவுவதற்கு ஆட்களே இல்லை... பாரதி படம் பார்த்த அந்த நாள்... என்னுள் எழுந்த எண்ணம்.. 'பாரதிக்கு வந்த இந்த நிலை, என் எதிரிக்குக் கூட வரக்கூடாதென்று!...' இன்னும் பாரதியின் அந்த இறப்புக் காட்சி என் மனதிற்குள் ஓடிக் கொண்டே இருக்கிறது...

இந்தக் காலத்தில் பணக்காரப்பையன்களை மட்டுமே பார்த்து காதலித்துக் கரம்பிடிக்கிறார்கள் பெண்கள்.. செல்லம்மா, அறியாத வயதில், கணவன் என்ற பெயரில், பாரதியை மணந்து கடைசி வரை அவருக்காகவே அவருடன் வாழ்ந்தவள்.. இன்றைய தினம் செல்லம்மாவையும் சிறப்பாக எண்ணிப் பார்க்கிறேன்..

என் பாரதியின் செல்லம்மா... போற்றுதற்குரியவள்...

என் பாரதி... என்றும் நினைவில் நிற்பவர்....

சனி, 10 செப்டம்பர், 2016

ஆசிரியர் என்பவர் யார்?

கோமுகி பதிப்பகத்தால் வெளியிடப்படும் மாத இதழ் 'கல்வி'. இந்த இதழில் நிறைய அரிய தகவல்கள் கொடுக்கப்படும். அனைத்தும் அருமையாக இருக்கும்.

இந்த மாதம் ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டதால், ஆசிரியர் என்பவர் எவ்வாறு இருக்க வேண்டுமென்பதை விளக்கி ஒரு ஆங்கில விமர்சனம் தரப்பட்டிருந்தது. அதை வாசிக்கும் போது, என் நண்பர்களிடம் அதைப் பகிர்ந்து கொள்ள வேண்டுமென்ற எண்ணம் எழுந்தது...

இதோ அந்த வரிகள்…

A Teacher takes Responsibility for your growth.
A Guru makes you Responsible for your growth.

A Teacher gives you things you do not have and require.
A Guru takes away things you have and do not require.

A Teacher answers your questions.
A Guru questions your answers.

A Teacher requires obedience and discipline from the students.
A Guru requires trust and humility from the students.

A Teacher clothes you and prepares you for outer journey.
A Guru strips you naked and prepares you for inner journey.

A Teacher is a guide on the path.
A Guru is a pointer to the way.

A Teacher sends you on the road to success.
A Guru sends you on the road to freedom.

A Teacher explains the world and its nature to you.
A Guru explains yourself and your nature to you.

A Teacher gives you knowledge and boosts your ego.
A Guru takes away your knowledge and punctures your ego.

A Teacher instructs you.
A Guru constructs you.

A Teacher sharpens your mind.
A Guru opens your mind.

A Teacher reaches your mind.
A Guru touches your spirit.

A Teacher instructs you on how to solve problems.
A Guru shows you how to resolve issues.

A Teacher is a systematic thinker.
A Guru is a lateral thinker.

A Teacher leads you by hand.
A Guru leads you by examples.

One can find a teacher.
A Guru had to find and accept you.

When the teacher finishes with, you celebrates.
When a Guru finishes with, your life celebrates.

நான் நல்ல ஆசிரியரா? இல்லை.... குருவா?
யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

இதே போல், செப்டம்பர் மாத இதழில் வெளிவந்த 'காட்டு மரத்தின் கண்ணீர்' என்ற கவிதை என்னை மிகவும் தொட்டது. வாசிக்கும் போதே ஆர்வத்தைத் தூண்டியது. நேரம் கிடைப்பவர்கள் இணைய தளத்திலும் இந்த இதழைப் படித்து மகிழலாம்.
www.komugikalvi.com

புதன், 7 செப்டம்பர், 2016

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்!!!


அன்புள்ள தோழிக்கு....
இன்று உன் பிறந்த நாள்...
பிறந்த நாள் வாழ்த்துகள் என்று ஒரு வரியில் கூறிவிட
மனம் வரவில்லை...
உனக்காக ஒருசில வரிகள்....
பொறுமைக்கு இலக்கணமாய்...
கருணையில் கருவாய்....
புன்முறுவலின் பூங்கொத்தாய்....
தலையசைக்கும் தலையாட்டி பொம்மையாய்...
தோள் கொடுக்கும் தோழியாய்...
கரடுமுரடான பாதையில் வழிகாட்டியாய்...
பாசத்தைப் பொழியும் அன்பு மகளாய்...
அரவணைக்கும் அன்னையாய்...
பகிர்ந்து கொள்ளும் பண்புடையவாய்...
என்று
எப்படி உன்னால் மட்டும் இத்தனை
குணங்களையும்
ஒருங்கே கொண்டிருக்க முடிகிறது?
உன்னைப் பார்த்துப்
பொறாமைப்படுகிறேன்...
உன் பொறுமை குணம்
எனக்கும்
வேண்டுமென்று...
கவிமா....
நீ ஒரு கவிதை.....
என் கவித்தலைவன் பாரதியின் பட்டப்பெயரையே பெயராகச் சூட்டிக் கொண்ட நீ.....
என் பாரதியைப் போன்று....
அவன் புகழைப் போன்று....
பல்லாண்டு...
எல்லா வளமும் பெற்று நலமுடன் வாழ....
உன் அன்புத் தோழியின்
இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்!!!

செவ்வாய், 6 செப்டம்பர், 2016

இதை மட்டுமாவது செய்வேன்...

நான் உன்னை அன்பு செய்கிறேன்... என்று
நூற்றுக்கு முந்நூறு முறை கூறுவது மட்டும்
அன்பல்ல...

ஒருவர் மீது நமக்குள்ள அன்பைக் காட்ட
பல வழிகள் உள்ளன..

இப்படி ஏதாவது ஒரு விதத்தில் நமதன்பை
மற்றவர்க்கு உணர்த்தலாம்...

அன்பு செய்வதாக மட்டும் ஒருவரை ஏமாற்றுவது

உலகிலுள்ள பாவங்களில்
மிகக் கொடுமையானது!!!

உனக்குப் பிடித்தால் பிடிக்கிறதென்று தைரியமாகச் சொல்!

உனக்குப் பிடிக்கவில்லை என்றால் அதையும் தைரியமாகச் சொல்லிப்பார்!!

கண்டிப்பாக நீ ஏற்றுக் கொள்ளப்படுவாய்!!!

அன்பைத் தானமாகப் பெறாதீர்!
அன்பைத் தானமாகத் தராதீர்!

அன்புடன் இனியா.

வெள்ளி, 29 ஜூலை, 2016

'சாவே உன் கொடுக்கு எங்கே?'

இது பைபிளில் எழுதப்பட்டிருக்கும் ஒரு வரி. இதை அநேக முறை படித்திருக்கிறேன். ஆனால், இன்று தான் இதை உணர்கிறேன்.

எங்களுக்குப் பரிச்சயமான நண்பர் ஒருவர்.. மூன்று முறை அல்லது நான்கு முறை சந்தித்திருப்போம். எங்கள் ஆலயத்திற்கு வந்திருக்கிறார். அவருடன் பேசியிருக்கிறோம்.. அவருடன் சேர்ந்து மதிய உணவு அருந்தியிருக்கிறோம்.. அவர் எங்களுக்கு ஒரு நல்ல நண்பர். இது நடந்து ஒன்றிரண்டு ஆண்டுகள் இருக்கும். அதன் பிறகு அவரைப் பார்க்க முடியவில்லை என்றாலும், எங்காவது அவர் பெயரைக் கேட்டால் அவர் எங்கள் நண்பர் என்று சொல்லிக் கொள்வோம்.

இன்று அதிகாலை ஆறு மணி இருக்கும். எனது நண்பன் ஒருவனிடமிருந்து குறுஞ்செய்தி ஒன்று வந்தது. இன்று காலை இரண்டு மணிக்கு திண்டுக்கல் சாலையில் நடந்த விபத்தில், எனக்குப் பரிச்சயமான மேற்குறிப்பிட்ட அந்த நபர் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார் என்றும், அவருக்காக வேண்டிக் கொள்ளச் சொல்லியும் அந்தக் குறுஞ்செய்தி இருந்தது.

அந்த நிகழ்ச்சியைக் கேட்டதிலிருந்து, என் மனதிற்குள் ஒரே நெருடல்... அவரது இறப்பு என்னுள் ஒரு கொடுக்கு போலக் கொட்டிக் கொண்டு இருக்கிறது. சில நாட்கள் பழகிய எங்களுக்கே இப்படி இருக்கும் போது, அவரது பெற்றோர்களின்... உறவினர்களின் நிலைமையை யோசித்துப் பார்த்தால் அழுதுவிடுவேன். 

1.அவர் கொடைக்கானலிலிருந்து எந்த எண்ணத்துடன் மதுரையை நோக்கி வந்திருப்பார்?

2. வரும் போது யாரிடமெல்லாம் சொல்லிவிட்டு வந்திருப்பார்?

3. ஒருவேளை ஜெபம் செய்யாமல் வந்திருப்பாரோ?

4. ஒருவேளை அவர் நல்லவர் என்பதால் சீக்கிரம் எடுத்துக் கொள்ளப்பட்டாரோ?

5. இளவயதுக்காரர் என்பதால் அவர் குடும்பத்திற்கு இது மிகப்பெரிய இழப்பாகத் தான் தெரியும்!!

6. கிளம்புவதற்கு முன் தன் நண்பருக்குக் குறுஞ்செய்தி அனுப்பியிருந்திருக்கலாம்!!

7. காரில் வரும்போது அயர்ந்து தூங்கிக் கொண்டு இருந்திருக்கலாம்!!!

இப்படிப் பலவாறு நாம் யோசிக்கலாம்.

ஆனால், அவருடைய இறப்புச் செய்தி ஒரு கொடுக்கைப் போலக் கொட்டிக் கொண்டே இருக்கிறது. அதனால் தான் இந்த நெருடல்.

நாம் எவ்வளவு பெரியவர்களாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

நிறைய கனவுகள்
நிறைய ஆசைகள்
நிறைய ஏக்கங்கள்
நிறைய செல்வங்கள்
நிறைய சொந்தங்கள்

எல்லாம் இருந்தாலும் உயிர் இல்லை என்றால் நாம் ஒன்றும் இல்லை... அந்த ஒரு உயிர் இல்லை என்றால் 'பிணம்' 'Dead Body'.

நமக்கே நிரந்தரமில்லாத இந்த ஒரு உயிர். ஆனால், அந்த உயிர் இருக்கும் போது
எவ்வளவு ஆட்டம்?
எவ்வளவு கோபம்?
எவ்வளவு எரிச்சல்?
எவ்வளவு பேராசை?
எவ்வளவு வஞ்சகம்?

இதெல்லாம் எதற்காக? கண் இமைக்கும் நொடியில் நமது உயிர் போய் விடுகிறது. நம் சாவு நம் கையில் இல்லை.. பின் ஏன் பிடிவாதங்கள்? கோபங்கள்? சண்டைகள்? சச்சரவுகள்?

இருக்கும் ஒரு வாழ்க்கையை செம்மையாக, சந்தோசமாக, மற்றவர்களுடன் சமாதானமாக, கோபமில்லாமல், சண்டையில்லாமல், பிடிவாதமில்லாமல் வாழ்ந்து செல்வோம்.

சாவுக்கு இவ்வளவு பெரிய கொடுக்கு இருப்பதை, இன்று தான் உணர்ந்து கொண்டேன்!!!

இனியா.

புதன், 20 ஜூலை, 2016

நின்னை சரணடைந்தேன்....

மகாகவி 'பாரதி' யின் அழகான கவிதை இது...
'நின்னை சரணடைந்தேன் கண்ணம்மா....

நின்னை சரணடைந்தேன்...'

இந்தக் கவிதை வரிகள் உணர்ச்சி பொங்க பாடப்பட்டு, பாரதி படத்திலும் இடம் பெற்றுள்ளது.
இந்தப் பாடலைக் கேட்கும் போதெல்லாம்,
மனதில் ஏதோ ஒருவிதமான அமைதி நிலை ஏற்படுகிறது.
மன சாந்தி என்றே சொல்லலாம்..
மேற்கொண்டு வரிகளை வாசித்துப் பார்த்தால் அதற்கு ஆயிரம் அர்த்தங்கள் கொள்ளலாம்..
அவரின் அன்றைய நிலைமை...
வறுமை...
ஏமாற்றம்...
எல்லாமும் 'பாரதி' படத்தில் அழகாக எடுக்கப்பட்டுள்ளன.

இறைவா,
துன்பம் வரும்போது மட்டும் உம்மை நோக்காமல், என் இன்ப வேளைகளிலும் உம்மை மறந்துவிடாமல் இருக்கவும், எனக்கு வருகின்ற இடர்களைத் தாங்கிக் கொள்ளும் பக்குவத்தையும் தாரும்.

அன்புடன்,
இனியா.

புதன், 29 ஜூன், 2016

மதிப்புக் கிடைக்குமா?

பெரும்பாலான நேரங்களில், நாம் மற்றவர்களிடமிருந்து எதிர்பார்ப்பது 'என்னை அவர்கள் மதிக்கிறார்களா?' என்பது தான்..
மதிப்புக் கிடைப்பது கூட
1. நம் உடைகளைப் பார்த்து
2. நம் பணத்தைப் பார்த்து
3. நம்மிடம் சொந்த வீடு இருக்கிறதா என்பதைப் பார்த்து
4. நாம் நல்ல நிலையில் இருக்கிறோமா என்பதைப் பாhத்து
5. அழகாய் இருக்கிறோமா என்பதைப் பார்த்து
6. என்ன வேலை செய்கிறோம் என்பதைப் பார்த்து...

இப்படிப் பார்த்துப் பார்த்து என்று அடுக்கிக் கொண்டே போகலாம்..

இப்படிப் பார்த்துப் பார்த்துச் செய்யும் நமக்கு, எப்படி ஒருவரை மதிக்க வேண்டிய குணம் கிடைக்கும்?

ஒருசில நேரங்களில் விலங்குகளை மதிக்கும் அளவிற்கு, மனிதர்களை மதிப்பதில்லை.... வீட்டில் பெட் என்ற பெயரில் பலவிதமான விலங்குகள், பறவைகளை வாங்கி வளர்க்கிறோம்.. அவைகளை நம்மில் ஒருவராகப் பார்க்கிறோம்.. அதில் தவறொன்றும் இல்லை... ஆனால், இப்படி வளர்ப்பவர்களில் எத்தனை பேர்,  மனிதர்களை மதிக்கத் தவறியிருக்கிறோம் என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்...

சரி... என்னிடம் மதிக்கும் குணம் இருக்கிறதா? இல்லையா? அதை எப்படி புரிந்து கொள்வது? வளர்த்துக் கொள்வது?

மதிக்கும் குணத்தைக் கற்றுக் கொள்ள எந்த வகுப்பிற்கும் செல்ல வேண்டிய அவசியமில்லை... பணம் கட்ட வேண்டிய அவசியமில்லை...

நாம் சந்திக்கும் ஒவ்வொருவரையும், நம் சொந்தங்களாக எண்ணி, அவர்கள் சூழ்நிலையில் நான் இருந்தால்.. என்பதை மட்டும் சிந்தித்தாலே போதும்.. நம்மில் தானாகவே மதிக்கும் குணம் வந்துவிடும்...

தயவுசெய்து மற்றவர்களை மதிக்கும் பழக்கத்தைக் கற்றுக் கொள்ள முயற்சி செய்வோம்..

இனிய வணக்கங்களுடன்...
இனியா.

செவ்வாய், 26 ஏப்ரல், 2016

என் அன்புக்குட்டி அம்லுவிற்கு....

உன்னைப் பார்த்த முதல் நாள்
'இது யார் குழந்தை?' என்று கேட்டேன்.
அடுத்த நாளே உன்னைத் தூக்கிக்
கொஞ்ச ஆவல் கொண்டேன்!
என் தாயிடம் 'அந்தக் குழந்தையைத்
தூக்கி வாருங்கள்!' என்று கட்டளையிட்டேன்.
உன்னை என் கையில் ஏந்திக் கொண்டு
நான் கூறிய முதல் வார்த்தை 'கைவிரல்கள் குட்டியாக
எவ்வளவு அழகாய் உள்ளன!' என்று.
இரண்டாவது நான் கேட்டது 'இவள் பெயர் என்ன?'
என் அம்மா கூறியது என்னவோ... 'சிவ ஹர்ஷினி'
நாங்கள் அழைக்க ஆரம்பித்தது என்னவோ.... 'அம்லு' என்று.
உன்னை எந்தப் பட்டப்பெயர் சொல்லிக்
கூப்பிட்டாலும் பொருந்தும் தான்!
உனக்கு நான் வைத்த பட்டப்பெயரான 'ஜீஜீ குட்டி'
கூட அழகு தான்!
மாலை பள்ளி முடிந்து வரும் வழியில்
என் கண்கள் தேடுவது என்னவோ உன்னை மட்டும் தான்!
'என் அம்லு எங்கே?' என்று தான் கேட்பேன்.
நீ இருந்தால் உன்னைத் தூக்கி அணைத்துக்கொள்ளும் போது
கிடைக்கும் சுகத்தில்
என் கவலைகள் அனைத்தையும் மறந்துவிடுவேன்!
உன்னை யாராவது வைத்திருந்தால்
அவர்களிடமிருந்து நீ எப்போது என்னிடம் வருவாய்
என்று எதிர்பார்த்துக் காத்திருப்பேன்!
உனக்கு உடல் நிலை சரியில்லை என்று சொன்னால்
உன்னைப் பற்றியே நினைத்துக் கொண்டிருப்பேன்!
சில நாட்கள் பள்ளியிலிருந்து என் அம்மையை
அழைத்து உன்னைப் பற்றி நலம் விசாரித்த
நாட்களும் உண்டு!
நீ தூங்கும் அழகை வருணிக்க வார்த்தைகள்
தமிழில்
இனி புதிதாய்த் தான் கண்டுபிடிக்க வேண்டும்!
நான் பார்க்கத் துடிக்கும்
ஸ்விட்சர்லாந்து குளிரைவிட
உன் தூக்கத்தின் ஸ்பரிசம்
என்னைக்
கொள்ளை கொள்ளச் செய்கிறது!
நீ தூங்கும் போது உன் கையில்
நான் இட்ட கோலங்கள்
உன் விரலுக்கு நான் இட்ட நகப்பூச்சுகள்
நீ விழித்தபின் அதைப் பார்க்கும் ஆச்சரியம்!
அனைத்தும் அழகே!
உன்னை மட்டுமே அதிகமாக கிளிக் செய்த
என் மொபைல் போனில்
நீ கேட்கும் உனக்குப் பிடித்தமான பாடல் 'டன்டனக்கா டன்டனக்கா'
உனக்காகத் தான் நான் தரவிறக்கம் செய்தேன்
என்பது உனக்குத் தெரியுமா?
உன்னையும் என்னையும் பார்த்து
சிலர்
உன் குழந்தையா என்று கேட்கும் அளவிற்கு
நீ என்னுடன் எப்படி இவ்வாறு ஒன்றித்தாய்?
உன்னைத் தூங்க வைக்க சிலநேரம்
நான் படும் பாட்டை நினைக்கும் போது
சிரிப்பாய் வருகிறது!
உன் வாயில் அதிக நேரம் ஒதுக்கி வைத்து
நீ உணவை உண்ணும் விதம்
உனக்கு மட்டுமே உரித்தானது!
உனக்குத் தினமும் மையிடுகிறேன்
நான் உன்னைக் கண் போட்டுவிடக் கூடாது
என்பதற்காக!
உன் சிணுங்கல்களை ரெக்கார்ட் செய்கிறேன்
உன் பேச்சைக் கேட்டுக் கொண்டிருக்க!
இரவு தூங்கி இருப்பாயா என்று
என் வீட்டில் அமர்ந்து கொண்டு
உன்னைப் பற்றி யோசித்துக் கொண்டிருக்கிறேன்!
மறுநாள் காலை உன்னை எப்போது
சந்திப்பேன் என்று ஏங்கிக் கொண்டிருப்பேன்
உன் வீட்டின் தாழ்பாளைப் பார்த்துக் கொண்டே!
நீ விளையாடும் அழகும்
அழும் அழகும்
கூட
நான் இரசிக்கும் விசயங்களே!
என்றும் என் அம்லுவாக
உன்னை
என் மடியில்
என் தோளில்
தூக்கிச் சுமக்க ஆசை!!!

திங்கள், 25 ஏப்ரல், 2016

அறிவுப் பசி...

இந்த நோயை மட்டும்

தேடிப் பெற்றுக் கொள்ள ஆசை!

நான் வேண்டாமென்று ஓடினாலும்

என்னை விட்டுச் சென்று விடாதே!

நீ என்னைவிட்டுப் போக

நான் எந்த மருந்தும் எடுத்துக் கொள்ள மாட்டேன்!

என்னை நோயின் உச்சத்திற்கு

எடுத்துக் கொண்டு போ!

அப்போது தான் உன்னைப் பற்றி

நன்கு அறிந்து கொள்ள முடியும்!

நீ வேண்டாமென்று ஒதுக்கியவர்களிடமிருந்து

என்னிடம் வந்துவிடு!

உன்னை வரவேற்க என் மனக்கதவு

என்றும் திறந்திருக்கும்!

நீ தாக்கிய மனிதர்களிடம் தான்

அதிகம் பழக மனம் துடிக்கிறது!

அவர்களிடம் நீ இருப்பதாலேயே

அவர்களை விரும்பவும் செய்கிறேன்!

நீ இருப்பதாலேயே ஒருவரை

விரும்புகிறேன்

என்றால்

உன்னை எவ்வளவு அன்பு செய்கிறேன் என்று பார்!

நீ என்னைக் கண்டுகொள்ளாத போதும்

நீயே எனக்கு வேண்டும் என்று

உனக்காய்

வழிமேல் விழி வைத்துக் காத்திருக்கிறேன்!

என்னை ஏமாற்றாமல் என்னிடம் வந்துவிடு!

நீ என்னுடன் இருந்தால் போதும்!

எல்லாம் என்வசம் தான்!

என்றும் உனக்காய் ஏங்கித் தவிக்கும்

என்னைக் கண்டு கொள்!

செவ்வாய், 8 மார்ச், 2016

இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்

பெண்ணே!
உன் உச்சந்தலையின் வகுடுகள்
உன் கூந்தலை மட்டும் இரண்டாகப் பிரிக்கவில்லை!
'நீ நன்மை, தீமைகளை ஆய்ந்துணர்பவள்'
என்பதைக் குறிக்கின்றன!
உன் காது மடல்கள்
'உன் கவலைகளைக் கேட்க 
நான் காத்திருக்கிறேன்'
என்கின்றன!
உன் அமுதவாய்
'ஆறுதல் மொழிகளை அள்ளி வீசுகின்றன!'
உன் நாசிக்குழல்கள்
'மற்றவர்களுக்கு உயிர் கொடுத்துக் கொண்டிருக்கின்றன!'
உன் அழகுக் கண்கள்
'பார்வையால் யாவர் மனதையும் கவர்கின்றன!'
உனதிரு கைகள்
'விரித்துக் கொடுப்பதிலும்,
விழுந்தவர்களைத் தூக்கிவிடுவதிலும்
ஆர்வமாய் இருக்கின்றன!'
உன் கால்கள்
'மற்றவர்களைக் கரையேற்றி விடுவதிலும்,
அவர்களுக்கு வழிகாட்டியாக
உன் பாதத் தடங்களைப் பதிக்கவும்,
என்றும் அயராது உழைக்கின்றன!'
உன் ஒவ்வொரு உறுப்பும்
மற்றவர்களுக்கு
உதவும்
குணநலன்களைக் 
கொண்டிருப்பதே உன் சிறப்பு!

பெண்ணாக இருப்பதில் பெருமை கொள்!

இனிய மகளிர் தின வாழ்த்துக்களுடன்...

ஜெனி