திங்கள், 27 ஏப்ரல், 2015

காந்தியின் பொன்மொழிகள்...

இன்று 'காந்திஜியின் பொன்மொழிகள்' என்ற தலைப்பில் ஆசிரியர். அருள்நம்பி எழுதிய புத்தகத்தை வாசிக்க நேர்ந்தது. இன்று பாதிப் புத்தகம் தான் வாசிக்க முடிந்தது. நாளை முடித்துவிடுவேன். இந்தப் புத்தகத்தில் எனக்குப் பிடித்த சில வரிகள்.

1. கடவுள் அன்பாக உள்ளார். 
'அன்பே சிவம்' என்று சொல்வார்கள். அதன் அர்த்தம், அன்பாய் இருப்பதனால் இறைவனைக் காணலாம். இதைத் தான் காந்தியடிகளும் கூறுகிறார். பல நேரங்களில் நாம் பக்கத்து வீட்டுக்காரருடன் சண்டை போட்டுவிட்டு, கோவிலுக்குச் செல்வோம். வீட்டில் தங்கையை அப்போது தான் அடித்து, சண்டை போட்டிருப்போம். ஆலயத்திற்குச் செல்வோம். இதனால் பயன் என்ன? கடவுள் எந்தக் கோவிலிலும், ஆலயத்திலும் இல்லை. நாம் மற்றவரை அன்பு செய்வதனால் நமக்குக் கிடைக்கும் அந்த ஆத்ம திருப்தி தான் கடவுள்.
2. பிரார்த்தனை என்பது இறைவனுடன் நாம் நேருக்கு நேர் பேச வாய்ப்பளித்துக் கொடுக்கும் ஓர் ஒலி ஊடகம் ஆகும்.
பிரார்த்தனை என்பது கிறிஸ்தவர்களுக்குப் பரிச்சையமான ஒரு வார்த்தை. இதை வாசித்தவுடன் எனக்கு ஞாபகம் வந்தது, எங்கள் வீட்டில் என்னைத் தினமும் எழுப்பி விடும் அந்த அலறல் சத்தம் தான்-ஆசீர்வாதம் டீவியிலிருந்து.
பிரார்த்தனை என்பது ஆசிரியர் சொன்னது போல், நாம் இறைவனுடன் உறவாடக் கிடைக்கும் சந்தர்ப்பம். 
நமக்குப் பிடித்தவரிடம், நமக்கு ஏதாவது வேண்டுமென்றால், எப்படி கேட்போம்? அதைப் போலத் தான் பிரார்த்தனையும் அமைய வேண்டும், அடுத்தவருக்குத் தொந்தரவு தராமல்.
3. வாழ்க்கை ஒரு நீர்க் குமிழி தான்...
நேற்றைய பதிவில் குறிப்பிட்டது போல், எதுவும் நம் கையில் இல்லை. வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியையும் ருசித்து வாழ வேண்டும்.
4. ஹிம்சை, கோழைத்தனம் இவை இரண்டில் சிறந்தது - ஹிம்சை
இவை இரண்டில் சிறந்தது ஹிம்சை. ஆனால், அதை விட அஹிம்சை மிகச் சிறந்தது என்று கூறுகிறார், ஆசிரியர். கோழைத்தனம் - எனக்குப் பிடிக்காத வார்த்தை என்று கூட சொல்லலாம். நான் கல்லூரியில் படிக்கும் போதும் சரி, இப்போதும் சரி... சில லூசுகளைப் பார்த்தால் கோபமாக வரும். என் மாணவர்களுக்கும் நான் கூறும் அறிவுரை... படிக்காமல் கூட இரு. ஆனால், கோழையாய் இராதே!!! சில ஆண்களைப் பார்த்தால் கூட, இப்படித் தான் இருப்பார்கள். ஆண்கள் என்றால் ஒரு தைரியம், எதையும் எதிர் கொள்ளும் ஆற்றல் வேண்டும். என் நண்பர்களுக்குக் கூட நான் அடிக்கடி கூறுவது இதுவே!

ஆக, இன்று 50 பக்கங்கள் படித்தேன். பொதுவாக, எனக்கு காந்தி மீது ஒரு அபிப்பிராயமே கிடையாது. பள்ளியில் படிக்கும் போது, என் உற்ற நண்பிக்கு அவரைப் பிடிக்காது. அதனால், நானும் அவரைப் பற்றித் தெரிந்து கொள்ள விரும்பவில்லை. இன்று செய்தித்தாளில் படித்த ஒரு வரி, என்னைப் பாதித்தது....'ஒருவர் செய்த தவற்றை மற. ஆனால், அந்த நபரை வெறுக்காதே!' 
ஒவ்வொருவருக்குள்ளும் ஏதாவது தவறு இருக்கும். நாம் அவரிடம் இருக்கும் நல்லதை மட்டும் எடுத்துக் கொள்ளலாமே?

ஞாயிறு, 26 ஏப்ரல், 2015

நிலநடுக்கம்-மனநடுக்கம்

நேற்று நேபாளத்தில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இறந்தனர். தினமும் சாலை விபத்தில் நூற்றுக்கணக்கானோர் பலியாகின்றனர். இதில் சில நாடுகளில் நடக்கும் போர்களால், அங்கிருக்கும் மக்களின் உயிருக்கு உத்திரவாதம் இல்லை. 
அவர்களுக்காக இறைவனிடம் சிறப்பாய் வேண்டிக் கொள்வோம். இவற்றை எல்லாம் கேட்கும் போது, எனக்குள் எழுகின்ற கேள்வி,'என் உடல் எப்பொழுது அழியும் என்று தெரியாமல் இருக்கும் எனக்கு எதற்கு இலட்சியம்? குறிக்கோள்? ஆசை?'

இப்படி என்னும் போது எனக்கு இன்னொரு சம்பவம் ஞாபகம் வந்தது. 2000 ஆண்டில் உலகம் அழிந்துவிடும் என்ற வதந்தி வந்த போது, புதுவருடம் பிறப்பதற்கு முன், பணமுள்ளவர்கள், தங்களிடம் இருந்த அனைத்தையும் நன்கு அனுபவித்து விட்டனர். 
இது என்ன வாழ்க்கை என்றே சில நேரம் எண்ணத்தோன்றும்.

இன்று தான் நம்மிடம் நன்றாகப் பேசிவிட்டுச் சென்றிருப்பார். நாளை இறந்து விட்டார் என்ற செய்தி வரும். இன்று என் வீடு என்று இருப்போம். நாளை நிலநடுக்கத்தால் தரைமட்டமாய் போயிருக்கும். 

இன்று தான் ஒன்றைப் புரிந்து கொண்டேன். எதுவுமே நிரந்தரமில்லாத இவ்வுலகில் வேறு எதற்காய் இவ்வளவு அவசரம்? இவ்வளவு போராட்டம்? இவ்வளவு மனவருத்தம்?

உனக்கு ஒன்றைப் பிடிக்கிறதா, தயக்கமின்றி இது எனக்குப் பிடிக்கிறதென்று சொல். ஒன்று பிடிக்கவில்லையா, இது எனக்குப் பிடிக்கவில்லை என்று ஒப்புக் கொள்.

உன்னுடன் இருக்கும் அனைவருக்கும் ஒருவர் செய்யும் செயல் பிடிக்கலாம். ஆனால், உனக்கு ஒத்துவரவில்லையா, இல்லை என்று சொல். பின் வருவதைப் பார்த்துக் கொள்ளலாம்.
எல்லாவற்றிலும் ஒத்து வாழ வேண்டுமென்று அவசியமில்லை.

இருக்கும் ஒரு வாழ்க்கையை - இனிமையாக, எளிமையாக, பெற்றோர், நண்பர்கள் என்று ஒவ்வொரு நிமிடமும் இரசித்து வாழ வேண்டும்.

இன்றே கடைசி நாள் என்றால் எனக்கு ஒரு ஆசை.... சாக்லேட் மழையில் நனைய வேண்டும்.
உங்களுக்கு என்ன ஆசை?

சனி, 25 ஏப்ரல், 2015

என் இனிய எழுத்து...


ஒரு வழியாக அம்மா சென்னையிலிருந்து வந்துவிட்டார்.  நம் அருகில் எப்பொழுதும் இருப்பவர், இல்லாத போது தான் அவரின் அருமை தெரியும். அம்மாவின் அருமையை உணர்ந்து கொண்டேன். ஐந்து நாட்களே தாக்குப்பிடிக்க முடியவில்லை. 

இன்று காலை நான் எழுந்ததும் விழித்தது, ஒரு டைரியின் முகத்தில் தான். சென்னையிலிருந்து என் மாமா எனக்காக கொடுத்துவிட்டிருந்தார், அம்மாவிடம். அந்த டைரியைப் பார்த்ததும், நேற்று நான் படித்த புத்தகத்தில் இருந்த ஒரு கதை தான் ஞாபகம் வந்தது. ஆபிரகாம் லிங்கன் யார் மீதும் தன் கோபத்தைக் காட்ட மாட்டாராம். ஒருவர் மீது கோபம் வந்தால் உடனே தன் டைரியை எடுத்து, அதில் அந்த நபரைத் திட்டி எழுதி மூடி வைத்து விடுவார். பின் அவர் மீது கோபம் குறைந்த பிறகு, அந்த பேப்பரைக் கிழித்து குப்பைத் தொட்டியில் போட்டு விடுவாராம். இதனால், அவரின் கோபம் குறைவதாகவும் உணர்ந்தாராம். இது தான் அவர் கோபக் கட்டுப்பாட்டின் இரகசியம். இந்த டைரியைப் பார்த்ததும் நாமும் அப்படி எழுதலாமா என்று தோன்றியது. யார் மீதாவது கோபம் வந்தால் அதைக் காட்டத் தான் நமக்கு இரண்டு அடிமைகள் இருக்கிறார்களே! பிறகு என்ன கவலை என்று விட்டுவிட்டேன்.

இன்று இரவு தான், இந்த டைரியில் ஒரு நெடுந்தொடர் எழுதலாம் என்று தோன்றியது. சரி என்று நினைத்து, எழுதவும் ஆரம்பித்துவிட்டேன். தினமும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் எழுதி, இதை என் ஆருயிர் நண்பிக்குப் பிறந்த நாள் பரிசாக அளிக்கலாம் என்று முடிவெடுத்தேன். எந்த அளவிற்கு இருக்கும் என்று தெரியவில்லை!!!!

நமக்குத் தான், எழுதுவது என்றால் சொல்லவா வேண்டும்? ஆபிரகாம் லிங்கனைப் போல் அனுபவம் இல்லை. ஆனால், நான் எழுதினால், என் மனப் பாரம் குறைவது போல் ஒரு உணர்வு வரும். அதுவும், நடுஇரவு பாடல் கேட்டுக் கொண்டே நானாக என் டைரியில் கிருக்கித் தள்ளுவது மிகவும் பிடிக்கும். அப்படித் தான் இந்தக் கதையையும் எழுத வேண்டும். 

நாம் எழுதும் ஒவ்வொரு எழுத்திற்கும் உயிர் இருக்கிறது. 

உணர்ந்து பாருங்கள்!!!

வெள்ளி, 24 ஏப்ரல், 2015

உண்மை உறவு...

 
உண்மை உறவு - நேற்று நான் படித்த புத்தகத்தில் இருந்து என்னைப் பாதித்த அழகான வரி...'உண்மை உறவு ஒருவர் மற்றவரிடம் எல்லாவற்றையும் பகிர்வதில் இருக்கிறது'. ஒரு இயந்திரம் போல் இயங்கிக் கொண்டிருக்கும் நம் வாழ்க்கைச் சூழலில், உறவு என்பதற்கு அர்த்தமே தெரியாத ஒரு நிலை. இப்பொழுதெல்லாம் உறவு என்றால் அம்மா, அப்பா மட்டும் தான். தவிர்த்து, நம் உடன் பயிலும் மாணவன் அல்லது மாணவி. நம் உடன் பணியாற்றுபவர்கள் என்று மிகவே சுருக்கிக் கொண்டோம். அப்படியே சில உறவுகள் அமைந்தாலும், நாம் அவர்களுடன் பகிர்ந்து கொள்வது என்னென்ன? சில நேரம் யோசிப்போம்.... இதை இவர்களிடம் சொல்லி இருந்தால் மன பாரம் குறைந்திருக்குமோ என்று! சில நேரம் அவர்களிடம் நம் கஷ்டங்களை எல்லாம் சொல்லி விடுவோம். ஆனால்... அவர் நம் மனதை அதிகம் காயப்படுத்தி விடுவார். உண்மை உறவுக்கு, முதலில் உறவுகளைத் தேர்ந்தெடுப்பது அவசியம். நம்பிக்கைக்குரிய உறவு கிடைக்கும் பட்சத்தில்... நாம் எல்லாவற்றையும் பகிரலாம். 

இன்று நான் யோசித்த விசயம் ஒன்று மட்டும் தான். 

'நான் யாருக்காவது உண்மையான உறவாக இருந்திருக்கிறேனா?'

வியாழன், 23 ஏப்ரல், 2015

உலகப் புத்தக தினம்...

உலகப் புத்தக தினம்- சத்தியம் தொலைக்காட்சியில் தினமும் காலை 8 மணிக்கு வரும் 'வரலாற்றில் இன்று' நிகழ்ச்சி நன்றாக இருக்கும். விடுமுறை என்பதால் தினமும் காணத் தவறுவதில்லை. அதன் மூலம் தான் இன்று உலகப் புத்தக தினம் என்று அறிந்து கொண்டேன். இன்று ஏதாவது ஒரு புத்தகத்தை முழுமையாகப் படித்து முடிக்க வேண்டுமென்று முடிவெடுத்தேன்.
எனது அண்ணன் வாங்கிக் கொடுத்த 'சுடர்கள்' புத்தகத்தை வாசிக்க ஆரம்பித்தேன். 
ஆசிரியர், வாழ்வில் நடந்து கொள்ள வேண்டிய தத்துவங்களை அழகாக, சிறு கதைகள் மூலம் கொடுத்திருக்கிறார். அதில் என்னைக் கவர்ந்த கதை...

வெளியாட்டிலிருந்து ஒரு துறவி இந்தியா வருகிறார். ஒரு கிராமத்தில் உள்ள மக்களைச் சந்திக்கிறார். அவர்களிடம், 'நீங்கள் என்ன செய்கிறீர்கள்?' என்று கேட்கிறார். ஒவ்வொருவரும் நான் விவசாயம்  செய்கிறேன், நான் பால் வியாபாரம் செய்கிறேன் என்று தங்கள் வேலையைச் சொல்கிறார்கள்.
ஒரு வேலைக்காரப் பெண் மட்டும், 'நான் என் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறேன்' என்று கூறுகிறாள். அதைக் கேட்டு மகிழ்ந்த துறவி மற்றவர்களிடம், 'நீங்கள் வேலையைச் செய்து பணம் சம்பாதிக்கிறீர்கள். ஆனால், இன்னும் யாரும் உங்கள் வாழ்க்கையை வாழத் தொடங்கவில்லை. வாழ்வதற்குத் தான் உழைப்பு. உழைப்பதற்கு வாழ்க்கை இல்லை' என்று கூறி அந்தப் பெண்ணை வாழ்த்தி விட்டுச் சென்றார்.

இதிலிருந்து நூலின் ஆசிரியர் கூற வருவது,'வாழ்வின் சுவையறிந்தால் சுமைகளும் சுகமாகும்'.

நானும் இதைத் தான் இன்று கற்றுக் கொண்டேன். வாழ்வின் ஒவ்வோரு தருணத்தையும் இரசித்து வாழ வேண்டும். என் விதி இது தான் என்று வாழ்க்கை காட்டும் பாதையில் செல்லக் கூடாது. நமக்கென்று அழகான பாதையை நாம் தான் அமைத்துக் கொள்ள வேண்டும்.


இதைத்தான் நாளை பிறந்த நாள்கொண்டாடப் போகும் என் தோழி கீர்த்தனாவிற்கும் கூறினேன். பிறந்த நாள் வாழ்த்துகள் கீர்த்தனா.



இன்று புத்தகம் தேடிக் கொண்டிருந்த போது என் நண்பனிடமிருந்து திருடி வந்த சில புத்தகங்களைக் காண நேர்ந்தது. சேர்ந்து படித்த புத்தகங்கள், செலவிட்ட நேரங்களை எண்ணிப் புன்னகைத்தேன்.


இத்தகைய நல்ல விசங்கள் இன்று நடக்கக் காரணம் - உலகப் புத்தக தினம்.


ஒவ்வொரு வருடமும் நினைவு கூறத்தக்கது.

நீங்களும் படித்து, பிடித்த கருத்துக்களை உங்கள் தோழர்களிடம் பகிருங்கள்.